மாவட்டத்தில் 2,233 பயனாளிகளுக்கு ரூ.35.37 கோடி தாட்கோ கடன்
உடுமலை; கடந்த 2023 - 24 நிதியாண்டு முதல், நடப்பு 2025 - 26 நிதியாண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில், மாவட்டத்தில் 2,233 பயனாளிகளுக்கு, மொத்தம், 35.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் தொழில் துவங்க கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறியிருப்பதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இலவம் பஞ்சு தொழில், போட்டோ ஸ்டுடியோ, மொபைல் விற்பனை மற்றும் சர்வீஸ், வாகன கடன், தையல் மெஷின், உணவகம், மளிகை கடை, கோழி வளர்ப்பு, ரத்த பரிசோதனை மையம், ஆடை உற்பத்தி, அரிசி வியாபாரம் போன்ற பல்வேறு தொழில் துவங்குவதற்கு 'தாட்கா' வாயிலாக, கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023 - 24 நிதியாண்டு முதல், நடப்பு 2025 - 26 நிதியாண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில், மாவட்டத்தில் 2,233 பயனாளிகளுக்கு, மொத்தம், 35.37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் தொழில் துவங்க கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. பெருமாநல்லுாரைச்சேர்ந்தவர், சாந்தாமணி. பத்து ஆண்டுகளாக பனியன் தொழிலாளியாக பணிபுரிந்து, 'தாட்கோ' திட்டத்தில், 3.50 லட்சம் ரூபாய் மானியத்துடன், 10 லட்சம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது. அந்த தொகையை வைத்து தொழில் துவங்கிய சாந்தாமணி, சுய தொழில் துவங்கி, தற்போது மாதம், 50 ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டிவருவதாகவும், மாதம், 20 ஆயிரம் ரூபாய் வீதம் கடனை திருப்பி செலுத்திய பின், 30 ஆயிரம் ரூபாய் நிகர வருமானம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.