உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய போலி நிருபர் உட்பட 6 பேர் கைது

தனியார் நிறுவன ஊழியரை மிரட்டிய போலி நிருபர் உட்பட 6 பேர் கைது

பல்லடம் : பல்லடம் அருகே தனியார் நிறுவன ஊழியரை வரவழைத்து மிரட்டி, செயின் மற்றும் மோதிரத்தை பறித்த போலி நிருபர், பெண் உட்பட, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.திருச்சியை சேர்ந்த, 43 வயது பெண் ஒருவர், சில மாதங்களாக, பல்லடத்தை அடுத்த, சின்னியகவுண்டம்பாளையம் கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தனியாக தங்கி உள்ளார். இவருக்கும், காங்கயம், படியூரை சேர்ந்த குமார், 43 என்ற தனியார் நிறுவன ஊழியருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, போனில் பேசிய குமாரை, தனது வீட்டுக்கு வருமாறு அப்பெண் கூறியுள்ளார்.உடனே, வீட்டுக்கு சென்ற குமாரை அடித்து தாக்கிய ஒரு கும்பல், அவரிடம் இருந்த, 3 சவரன் செயின் மற்றும் மோதிரத்தை பறித்துக் கொண்டனர். இது குறித்து குமார் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரித்து, பெண், பல்லடத்தை சேர்ந்த மகன் குமார், 29, அம்மாபாளையத்தை சேர்ந்த ராஜதுரை, 24, ராயர்பாளையத்தை சேர்ந்த தினகரன், 42, ஜே.கே.ஜே., காலனியை சேர்ந்த பரத், 22, மற்றும் மேற்கு பல்லடத்தை சேர்ந்த துரைராஜ், 29 ஆகிய ஆறு பேரை கைது செய்து, கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர். இதில், தினகரன் என்பவர் 'ஹலோ மெட்ராஸ்' என்ற பெயர் கொண்ட மாத இதழில் மாவட்ட நிருபராக உள்ளார். இவர், கடந்த சில மாதங்களுக்கு முன், ராயர்பாளையத்தில் நடந்த இதேபோன்ற வழக்கில், கைதானது குறிப்பிடத்தக்கது. போலீசார் கூறுகையில், 'பெண்களை போனில் பேச வைத்து, வருபவர்களிடம், இதேபோல், பணம் நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு விடுவதை தொழிலாக செய்து வருகின்றனர். இதுபோன்ற கும்பலால் பாதிக்கப்பட்டவர்கள், போலீஸ் புகார் தரமாட்டார்கள் என்பதால், அதனை சாதகமாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த கும்பலில், மேலும் சில போலி நிருபர்கள் உள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரிக்கிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ