இனிப்பும், கசப்பும் கலந்த கலவை! பொருளியல், இயற்பியல் தேர்வு குறித்து மாணவர்கள் கருத்து
திருப்பூர்; பிளஸ் 2 பொருளியல் மற்றும் இயற்பியல் பாடம் சிலருக்கு கடினமானதாகவும், பலருக்கு எளிமையானதாகவும் இருந்தது.பிளஸ் 2 தேர்வில் கடைசி தேர்வு நேற்று நடந்தன. மாவட்டத்தில் இயற்பியல் பாடத் தேர்வெழுத, 13,904 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 13,827 பேர் தேர்வெழுதினர். 77 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். பொருளியல் தேர்வில், 11,329 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 11,157 பேர் தேர்வெழுதினர்; 172 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். கார்த்திகா:
பொருளியல் தேர்வு, எளிதாக தான் இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களில், ஓரிரு வினாக்கள் மட்டுமே, புத்தகத்தின் உட்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. பெரும்பாலான வினாக்கள், புத்தக வினாக்களில் இருந்து தான் கேட்கப்பட்டிருந்தன. ஆசிரியர்கள் குறித்து கொடுத்த பெரும்பாலான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. காயத்ரி:
என்னை பொருத்தவரை பொருளியல் தேர்வு மிக எளிதாக இருந்தது. ஓரிரு வினாக்கள் மட்டுமே, சற்று குழப்பும் வகையில் இருந்தது. துவக்கம் முதலே, பாடங்களை நன்கு படிப்பேன் என்பதால், எனக்கு அது கடினமானதாக தெரியவில்லை. 100 மதிப்பெண் கிடைக்கும் என நம்புகிறேன். இந்திரா:
இயற்பியல் பாடம், கடினமாக இருந்தது. 5 மதிப்பெண் வினா, சற்று குழப்பும் விதமாக இருந்தது. 2 மதிப்பெண் வினாக்கள் கூட எளிதாக இல்லை சில கேள்விகள், எங்கிருந்து கேட்கப்பட்டவை என்று கூட கணிக்க முடியவில்லை. இருப்பினும், தேர்ச்சி செய்து விடும் அளவுக்கே கேள்வித்தாள் இருந்தது. அபில் அகமது :
இயற்பியல் பாடத்தில், 5 மதிப்பெண் வினாக்களை தவிர, அனைத்தும் எளிதாக தான் இருந்தது; பெரும்பாலும், புத்தகத்தின் உட்புறம், வெளிப்புறம் என கலந்தே வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. தேர்ச்சி பெறுவதில் எந்த சிரமமும் இருக்காது. ஆசிரியர்கள் சொல்வதென்ன?
பொருளியல் ஆசிரியர்கள் கூறுகையில், 'பொருளியல் பாடம் எளிதாக தான் இருந்தது. 5 மதிப்பெண் பொறுத்தவரை 'சாய்ஸ்' கேள்விகள், இரண்டும் சற்று கடினமானதாக இருந்தாலும், மாணவர்கள் தேர்ந்தெடுத்து எழுதும் அளவில் தான் இருந்தது,' என்றனர்.இயற்பியல் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், 'இம்முறை கணக்கு சார்ந்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. 2 மதிப்பெண் வினாக்கள் கூட, சற்று கடினம் தான். இருப்பினும், தேர்ச்சி பெறுவது எளிது,' என்றனர்.