மூலப்பொருள் கிடைத்தால் சிறக்கும் தொழில்; மலை கிராமத்தில் எதிர்பார்ப்பு
உடுமலை: அரசு கொள்முதல் மையங்கள் வாயிலாக, கழிவு பட்டுக்கூடுகள் தொடர்ந்து கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்தால், கைவினை பொருட்கள் தயாரிக்க, பயனுள்ளதாக இருக்கும் என மலைவாழ் கிராம பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகத்திற்குட்பட்ட, மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் பெண்களுக்கு, நிரந்தர வருவாய் கிடைக்கும் வகையில், மத்திய பட்டு வாரியத்தின் சார்பில், சில ஆண்டுகளுக்கு முன், கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியளிக்கப்பட்டது.பட்டு நுால் உற்பத்தியின் போது, வீணாகும் பட்டுக்கூடுகளிலிருந்து அழகிய மாலை, பூ ஜாடி உட்பட பொருட்கள் தயாரிக்க அப்பகுதி பெண்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.இப்பொருட்களுக்கு, தேவை அதிகமுள்ளதால், தங்களுக்கு வருவாய் கிடைக்கும் என மலைவாழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.ஆனால், கைவினை பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளான பட்டுக்கூடுகள் அவர்களுக்கு எளிதில் கிடைக்கவில்லை.சில மாதங்கள், கோவையிலுள்ள பட்டு வளர்ச்சித்துறை, கொள்முதல் மையத்திலிருந்து வீணாகும் பட்டுக்கூடுகளை பெற்று, கைவினை பொருட்களை அவர்கள் தயாரித்து வந்தனர். பின்னர், மூலப்பொருள் முற்றிலுமாக கிடைக்காமல், தொழில் முடங்கி விட்டது.மலைவாழ் கிராம பெண்கள் கூறியதாவது: வனப்பகுதியில், வசிக்கும் தங்களுக்கு, வருவாய் கிடைக்க பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டாலும், அத்தொழில்களை தொடர்ந்து மேற்கொள்வதில் தொடர் சிக்கல்கள் ஏற்படுகின்றன.பட்டுக்கூடுகளிலிருந்து கைவினை பொருட்கள் தயாரிக்க ஆர்வம் உள்ளது. வனப்பகுதியிலிருந்து மூலப்பொருளுக்காக, கோவை உட்பட பகுதிகளுக்கு செல்ல முடியாது. எனவே, 'ரீலிங்' மையங்களிலிருந்து வீணாகும் பட்டுக்கூடுகளை, உடுமலை பகுதியிலேயே கிடைக்கும் வகையில், அரசு நடவடிக்கை எடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு, தெரிவித்தனர்.