இயல்பை விட குறைந்த பருவமழை பயிர் சாகுபடி பணிகள் பாதிப்பு
உடுமலை; பருவ மழை இயல்பை விட, 40.62 மி.மீ., குறைந்துள்ளதோடு, வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால், விவசாய சாகுபடி பாதித்துள்ளது. உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் விவசாயம் பிரதானமாக உள்ளது. தென்னை, கரும்பு, நெல், மக்காச்சோளம், காய்கறி பயிர்கள் என பல்வேறு பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தென் மேற்கு பருவ மழை துவக்கத்தில் தீவிரமாக இருந்த நிலையில், தொடர்ந்து மழை குறைந்து, வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு, 678.26 மி.மீ.,ஆகும். ஆக., மாதம் வரை கிடைக்க வேண்டிய சராசரி மழையளவு, 274.57 மி.மீ. ஆனால், நடப்பாண்டு, 233.95 மி.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. இயல்பான மழையை விட, 40.62 மி.மீ., குறைந்துள்ளது. இதனால், மழையை எதிர்பார்த்து சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு, நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் கூறியதாவது : தென் மேற்கு பருவ மழை, மே - ஜூன் துவக்கத்தில் நல்ல முறையில் கிடைத்த நிலையில், தொடர்ந்து மழையில்லாமல், வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கமும் அதிகரித்த நிலையில், காய்கறி, தானிய பயிர்கள் பாதித்துள்ளன. மழையை எதிர்பார்த்து சாகுபடி செய்யப்பட்ட மானாவாரி பயிர்களுக்கும் நீர் கிடைக்காமல் காய்ந்து வருகிறது. வட கிழக்கு பருவ மழையாவது, கை கொடுக்குமா, என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்திருக்கின்றனர். இவ்வாறு, தெரிவித்தனர்.