உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு; வேளாண் துறை அறிவிப்பு

பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு; வேளாண் துறை அறிவிப்பு

உடுமலை: பிரதம மந்திரிபயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு நெல், மக்காச்சோளம், கொண்டைக்கடலை, சோளம் பயிர்களை விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு, நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், அதிநவீன தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மத்திய அரசு, பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.பயிர்க்கடன் பெறும் விவசாயிகளை கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில், தற்போது அவர்களின் விருப்பத்தின் பேரில் மட்டுமே, பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும், மாவட்ட வாரியாக, பயிர் வாரியான சராசரி மகசூல் அடிப்படையில் காப்பீட்டுத்தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்திற்கு, இத்திட்டத்தில் தற்போது, சிறப்பு பருவம் மற்றும் ராபி பருவத்தில், (நெல் - 2) மக்காச்சோளம், கொண்டைக்கடலை மற்றும் சோளம் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.எனவே, விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக, பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கலை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று, அதனுடன் வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் காப்பீடு செய்யலாம்.நெல்லுக்கு ஏக்கருக்கு, ரூ.573 பிரீமியம் தொகையாக, வரும், நவ., 15க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.மக்காச்சோளம்- ஏக்கருக்கு ரூ.541 -பிரீமியமாகவும், கொண்டைக்கடலை ஏக்கருக்கு ரூ.231 பிரீமியமாகவும், வரும், நவ., 30க்குள் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். சோளம் பயிருக்கு. ஏக்கருக்கு ரூ.50 பிரீமியம், வரும் டிச., 16க்குள் காப்பீடு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனவே, விவசாயிகள் இயற்கை சீற்றங்களால் பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் இழப்புகளிலிருந்து பாதுகாக்கும் வகையில், சாகுபடி செய்துள்ள பயிர்களை அரசு நிர்ணயத்த காலக்கெடு தேதிக்கு முன்னரே காப்பீடு செய்து பயன் அடையுமாறு, வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் விபரங்களுக்கு, மொபைலில் உழவன் செயலி வாயிலாகவும், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள், வேளண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை