திருமூர்த்திமலையில் சுற்றுலா தின கொண்டாட்டம்; ஆய்வு கூட்டத்தில் முடிவு
உடுமலை : உடுமலையில், திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர் ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த குமார் தலைமை வகித்தார்.இதில், திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா துறையின் செயல்பாடுகள், தற்போது நடைபெற்று வரும் திட்டப்பணிகள், தமிழக அரசின் சுற்றுலாக் கொள்கை, உலக சுற்றுலா தின விழா கொண்டாடுவது குறித்து, சுற்றுலா அலுவலர் பேசினர். இதில், மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி தொடர்பான பல்வேறு கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை, சுற்றுலா தொழில் முனைவோர்கள் தெரிவித்தனர்.அப்போது, திருப்பூர் மாவட்டத்தில் சாகச சுற்றுலா செயல்பாடுகள் நடைபெற்றால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, சுற்றுலா தொழிலை நம்பி உள்ள தொழில் முனைவோர்களின் வாழ்வாதாரம் உயரும். எனவே அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், என வலியுறுத்தினர்.இக்கூட்டத்தில், உலக சுற்றுலா தின விழாவை, திருமூர்த்தி மலையில் கொண்டாடுவது எனவும், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் சுற்றுலா தொடர்பாக, சுற்றுலா மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள், சுற்றுலா கருத்தரங்கம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.உடுமலை அரசு கல்லுாரி சுற்றுலாத்துறை உதவி பேராசிரியர் விஜய் ஆனந்த், திருப்பூர் மாவட்டத்திலுள்ள தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், சுற்றுலா சங்கங்களின் நிர்வாகிகள் பிரசாத்,பொன்ராஜ், சையது முஹமது, சந்தோஷ், ஜவகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.