மண் அரிப்பை தடுக்க வெட்டிவேர்
உடுமலை:மண் சூழலை பாதுகாக்கவும், மண் அரிப்பை தடுக்கவும், விவசாயிகள், வெட்டிவேரை விளைநிலங்களில் சாகுபடி செய்யலாம் என தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இது குறித்து தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: மண் வளத்தை பாதுகாப்பதில், வெட்டி வேர் புல் முக்கிய பங்கு வகிக்கிறது. புல் வகையை சேர்ந்த இந்த தாவரம், வறட்சியையும் தாங்கி வளரக்கூடியதாகும். தீப்பிடித்தால் கூட இப்புல் மீண்டும் தழையும் தன்மையுடையது. அனைத்து பயிர்களுடன், சமவெளி மற்றும் மலைப்பாங்கான பகுதியிலும் இப்புல் வளரும். சூரிய ஒளியை அறுவடை செய்து, அருகிலுள்ள பயிர்களுக்கும் பலன் அளிக்கும். தென்னந்தோப்புகளில், இப்புல் வகையை வளர்த்தால், நீர் பிடிப்பு திறனை அதிகரித்து, மண்ணில் நீண்ட நாள் ஈரம் காக்க உதவும். சரிவான பகுதிகளில் சாகுபடி செய்தால், தண்ணீர் அரிப்பு மற்றும் மண் அரிப்பு சேதம் வராமல் தடுக்கலாம். பல விதமான பலன்கள் தரும் வெட்டி வேரை விவசாயிகள் சாகுபடி செய்யலாம். இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்தனர்.