கோவில் கலைஞர்களுக்கு அறநிலையத்துறை பாராட்டு
திருப்பூர்; தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை சார்பில், 'கலைச்சுடர்மணி' மற்றும் 'கலை நன்மணி' பட்டம் பெற்ற கலைஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்துள்ள கலைஞர்களுக்கு, விருதும், பொற்கிழியும் வழங்கப்பட்டது. உடுமலையில் நடந்த நிகழ்ச்சியில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் பணியாற்றும், கலைஞர்கள் இருவர் பொற்கிழி பெற்றுள்ளனர்.கோவிலின் ஆஸ்தான நாதஸ்வர வித்வான் சிங்காரவேலுவுக்கு, 'கலை நன்மணி' என்ற பட்டமும், ஓதுவாமூர்த்தி தியாகராஜனுக்கு 'கலைச் சுடர்மணி' என்ற பட்டமும் வழங்கப்பட்டது. கலை பண்பாட்டுத்துறை சார்பில் பட்டம் வென்ற கோவில் கலைஞர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் பாராட்டும் நிகழ்ச்சி நடந்தது.கோவில் சிவாச்சாரியார்கள், அறங்காவலர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்தினர்.