தென்னம்பாளையம் மார்க்கெட்டில் கெட்டுப்போன மீன்கள் அழிப்பு
திருப்பூர்; தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள், கெட்டுப்போன 31 கிலோ மீன்களை பறிமுதல் செய்து, அழித்தனர்.தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சிரஞ்சீவி, மீன்வள ஆய்வாளர் ரெஜினா ஜாஸ்மின் உள்ளிட்டோர், நேற்று திடீர் ஆய்வு நடத்தினர்.கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மற்றும் கெட்டுப்போன 31 கிலோ மீன்கள் பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.'முதலில் கொண்டுவரப்படும் மீன்களை, முதலில் விற்பனை செய்வது என்கிற நடைமுறையை பின்பற்றவேண்டும். கெட்டுப்போன மற்றும் பழைய மீன்களை விற்கக்கூடாது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஐஸ் கட்டிகளை மீன் இருப்பு வைக்க பயன்படுத்தவேண்டும்' என, மீன் வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.----எப்படி இருக்க வேண்டும்?''மீன்களின் கண்கள் பிரகாசமாக உள்ளதா; செதில்கள் சிவப்பு மற்றும் பிங்க் நிறத்தில் உள்ளதா என பார்த்து வாங்கவேண்டும். மீன்களின் மையப்பகுதியில் லேசாக அழுத்தும்போது, அந்த பகுதி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவேண்டும். கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்வது உள்பட உணவு சார்ந்த புகார்களை, 94440 42322 என்கிற எண்ணில் தெரிவிக்கலாம்'' என்றனர், உணவு பாதுகாப்பு அதிகாரிகள்.---கெட்டுப்போன மீன்களை, பினாயில் ஊற்றி அழிக்கிறார், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை.
மீன் விற்பனை மந்தம்
நேற்று முன்தினம் மாலை துவங்கி, விடிய விடிய மழை துாறியபடியே இருந்ததால், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் வாடிக்கையாளர் கூட்டம் குறைந்தது. கடல் மீன் வரத்து, 60 டன்னில் இருந்து, 45 டன்னாக குறைந்திருந்தது. வாடிக்கையாளர் குறைவு என்பதால், கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் மீன் விலையில் மாற்றமில்லை. மதியத்துக்கு பின்பும் மீன்கள் விற்றுத்தீராததால், வியாபாரிகள் மாலை வரை காத்திருந்தனர்.