ஆதார் அடையாள அட்டை திருத்த சிரமம் கூடுதல் மையங்கள் தேவை
உடுமலை: ஆதார் அடையாள அட்டை திருத்தம் மற்றும் 'அப்டேட்' செய்ய, உடுமலை தாலுகாவில், கூடுதலாக மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை தாலுகாவில், 5 உள்வட்டங்களில், 75 வருவாய் கிராமங்கள் உள்ளன. அதிக மக்கள் தொகையை உள்ளடக்கிய இத்தாலுகாவில், அரசின் பல்வேறு இ-சேவைகளை பெற, போதிய மையங்கள் இல்லை.அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் அடையாள அட்டையில் பிழை திருத்தம், மொபைல்போன் எண் சேர்த்தல், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு, 'அப்டேட்' செய்தல் ஆகிய பணிகளுக்காக மக்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர்.தற்போது, உடுமலை தாலுகா அலுவலகத்திலுள்ள இ-சேவை மையம், தலைமை தபால் நிலையம், நகராட்சி அலுவலகம் மற்றும் இரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில், மட்டுமே, ஆதார் அட்டை குறித்த சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த மையங்களில், நாளொன்றுக்கு, 25க்கும் குறைவான டோக்கன்கள் மட்டும் வினியோகிக்கப்படுகிறது.இதனால், தொலைதுார கிராமங்களில் இருந்து வரும் மக்கள் நாள்தோறும், உடுமலைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல வேண்டியுள்ளது. மேலும், போதிய பஸ் வசதி இல்லாத கிராமங்களை சேர்ந்த மக்கள், அதிகாலையில் கிளம்பி, காலை 8:00 மணியில், இருந்து நகரிலுள்ள மையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது.குழந்தைகளுக்கு, புதிதாக ஆதார் பதிவு செய்யும், சேவை குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, நாள்தோறும், குழந்தைகளுடன், பெண்கள், நகருக்கு வந்து செல்லும் நிலை உள்ளது.இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வாக, உடுமலை தாலுகாவில், இச்சேவையை மேற்கொள்ளும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும், உள்வட்டம் வாரியாக ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்களை நடத்துவது அவசியமாகும்.கிராமப்புறங்களில், காட்சிப்பொருளாக உள்ள இ-சேவை மையங்களில், அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தினாலும், பல ஆயிரம் கிராம மக்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும்.பள்ளி விடுமுறை காலம் துவங்கியுள்ள நிலையில், மாணவ, மாணவியர் நலனுக்காக கூடுதல் மையங்கள் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.