உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தினமலர்-பட்டம் இதழ் சார்பில் வினாடி-வினா: ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மாணவர்கள் அசத்தல்

 தினமலர்-பட்டம் இதழ் சார்பில் வினாடி-வினா: ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மாணவர்கள் அசத்தல்

உடுமலை: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி - வினா போட்டி, உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவுத்திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் மெகா வினாடி - வினா போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் வினாடி - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப்போட்டியில் பங்கேற்பர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதன் ஒரு பகுதியாக, உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், வினாடி - வினா போட்டி நடந்தது. தகுதிச்சுற்றில், 100 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதிப்போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'எப்' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற, ஒன்பதாம் வகுப்பு மாணவியர் இதயா, தன்யதா ஆகியோர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும், பள்ளி முதல்வர் மாலா, ஒருங்கிணைப்பாளர் சியாமளா, ஆசிரியர்கள் விஜயகுமார், குமுதா ஆகியோர், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நுண்ணறிவு மேம்படும் பள்ளி முதல்வர் மாலா கூறுகையில், ''பள்ளி மாணவர்களின் பொது அறிவுத்திறனை வளர்க்க சிறப்பு அம்சங்களோடு 'பட்டம்' இதழ் வெளியாகிறது. கற்றல் திறனை மேம்படுத்தவும், படிக்கும் ஆர்வத்தை துாண்டும் வகையில், பல்வேறு சிறப்பு பகுதிகள் வெளியாகிறது. தமிழ், அறிவியல், தொழில்நுட்பம், கணினி, விளையாட்டு முதலான பல்வேறு துறை சார்ந்த செய்திகள் அடங்கியுள்ளன. மாணவர்களின் நுண்ணறிவுத்திறனை மேம்படுத்த போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், கணிதப்புதிர்கள், மாற்றி யோசி போன்ற பகுதிகள் பயனுள்ளதாக உள்ளது,'' என்றார்.

சிந்தனை வளர்கிறது

மாணவி இதயா: 'பட்டம்' இதழை வாசிப்பதால், எனது கற்றல் திறனும், வாசிப்புத்திறனிலும் முன்னேற்றம் காணப்படுகிறது. பொது அறிவு சார்ந்த செய்திகள், தமிழ், அறிவியல், விளையாட்டு செய்திகள் பயனுள்ளதாக உள்ளது. வினாடி-வினா, புதிர்கள் புதிய சிந்தனையாற்றலை வளர்க்கிறது. மாணவி தன்யதா: 'பட்டம்' இதழில் வெளியாகும் செய்திகள் கல்வியில், மாணவ, மாணவியர் முன்னேறுவதற்கு ஆர்வத்தை துாண்டுகிறது. போட்டித்தேர்வுகளுக்கான பொது அறிவை மேம்படுத்தி வளர்ப்பதற்கு உதவியாக உள்ளது. கணினி சார்ந்த துறைச்செய்திகள், புதிய கண்டுபிடிப்புகள் கற்றல் ஆர்வத்தை மேலும் வளர்க்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை