காட்சிப்பொருளாக மாறிய உலர்கலன்கள்
உடுமலை:கூட்டுறவு சங்க வளாகங்களில், காட்சிப்பொருளாக உள்ள உலர் கலன்களை புதுப்பித்து, பயன்பாட்டு கொண்டு வர வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. விவசாயிகள் கொப்பரை உற்பத்தி செய்ய, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே, கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக சிறப்பு திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டது.அதன்படி இரு வட்டாரங்களிலும், 10க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகங்களில், சோலார் உலர் கலன் அமைக்கப்பட்டது.இந்த கட்டமைப்பில், கொப்பரை மட்டுமல்லாது, மிளகாய் உள்ளிட்ட பிற விளைபொருட்களையும் காய வைத்து, சந்தைப்படுத்த முடியும். ஆனால், இந்த உலர்கலனை பயன்படுத்துவது குறித்து, விவசாயிகளிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.இதனால், பெரும்பாலான கூட்டுறவு சங்க வளாகங்களில், சோலார் உலர் கலன் பயன்பாடு இல்லாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இவற்றை புதுப்பிக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.