| ADDED : நவ 28, 2025 03:31 AM
உடுமலை: காலி மதுபாட்டில்களை திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதுகுறித்து, திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்திலுள்ள மதுக்கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை, விளை நிலங்கள், சாலைகளில் வீசி செல்கின்றனர். இதனை தடுக்கும் வகையில், கோர்ட் உத்தரவுப்படி, காலி மது பாட்டில்களை அதே மதுக்கடையில் திரும்ப பெற்றுக்கொள்ளும் திட்டம், நேற்று முதல் (27ம் தேதி) அமலுக்கு வந்துள்ளது. இதில், மதுக்கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை அடையாளம் காணும் வகையில், பாட்டில் மீது கடை எண் குறிப்பிடப்பட்டு, 10 ரூபாய் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும். மதுபாட்டில்களை விற்பனை செய்யும்போது, கூடுதலாக 10 ரூபாய் வாடிக்கையாளரிடமிருந்து பெறப்படும். வாடிக்கையாளர், காலி மது பாட்டில்களை, அதில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கரோடு, அதே மதுக்கடையில் ஒப்படைத்தால், 10 ரூபாய், வழங்கப்படும் . இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.