தி.மு.க.,வுக்கு எதிராக பிரசாரம் சுற்றுச்சூழல் இயக்கம் அறிவிப்பு
திருப்பூர்: ஈரோடு இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்வதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் அறிவித்துள்ளது.திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில், கனிம வளங்களை கொள்ளைக்கு எதிராக போராடுவோருக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் அளித்த மனு குறித்து, அவர் கூறியதாவது:சட்டவிரோத கல்குவாரிகளை எதிர்த்து போராடுவோர் மீதான தாக்குதல்கள், மிரட்டல்கள் தமிழகத்தில் அதிகரித்துவருகிறது. சமீபத்தில், புதுக்கோட்டையில், ஜாகுபர் அலி வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். திருப்பூர் அருகே, ஊத்துக்குளி, வெங்கலப்பாளையத்தில் விவசாயி நடராஜன் மீது வாகனம் ஏற்றி கொலை முயற்சி, பத்திரிகையாளர் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன.கனிம வள கொள்ளையர்கள் மீது புகார் அளித்தாலும், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழகம் முழுவதும் கனிமவள கொள்ளை படுஜோராக நடைபெற்றுவருகிறது. ஈரோடு சட்டசபை இடைத்தேர்தலில், கனிம மாபியாக்களுக்கு துணை நிற்கும் தி.மு.க.,வுக்கு எதிராக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில், ஒருவாரம் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.