உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ராணுவமே வந்தாலும் குப்பை கொட்ட விட மாட்டோம்! சின்னக்காளிபாளையம் கிராம மக்கள் திட்டவட்டம் 

 ராணுவமே வந்தாலும் குப்பை கொட்ட விட மாட்டோம்! சின்னக்காளிபாளையம் கிராம மக்கள் திட்டவட்டம் 

பல்லடம்; 'ராணுவத்தையே குவித்தாலும், சின்னக்காளிபாளையம் கிராமத்தில், ஒருபோதும் குப்பை கொட்ட அனுமதிக்க மாட்டோம்,' என, போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் திட்டவட்டமாக கூறினர். திருப்பூர் அருகே சின்னக்காளிபாளையம் கிராமத்தில், மாநகராட்சி குப்பைகளை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொண்டு வர வாய்ப்பு உள்ளது என்று கருதி, பெண்கள் உட்பட பொதுமக்கள் சின்னக்காளிபாளையம் பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து, போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: குப்பை கொட்டும் விவகாரத்தை கையில் எடுத்துள்ள திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், ஒவ்வொரு கிராமமாக சென்று கிராம மக்களை பகைத்துக் கொண்டு வருகிறது. எங்களது போராட்டத்தில், இடுவாய், கரைப்புதுார், ஆறுமுத்தாம்பாளையம், வேலம்பாளையம் ஊராட்சிகள் உட்பட, தற்போது, இடுவம்பாளையம், வஞ்சிபாளையம் கிராம மக்களும் ஆதரவு அளித்துள்ளனர். குப்பைக்கு எதிராக ஒரு மாதமாக நாங்கள் போராடி வரும் நிலையில், மாநகராட்சி நிர்வாகம், மனிதாபிமானமே இல்லாமல், குப்பை கொட்ட துடித்து வருகிறது. போலீசார் மட்டுமல்ல ராணுவத்தையே கொண்டு வந்து குவித்தாலும், ஒருபோதும் சின்னக்காளிபாளையம் கிராமத்தில் குப்பை கொட்ட விடமாட்டோம். கோர்ட் நல்ல தீர்ப்பு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையே, மாலை, 5.00 மணிக்கு, கோர்ட் விசாரணை நாளை (இன்று) ஒத்தி வைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, ஆண்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடர்வது என்றும், பெண்கள் வீட்டுக்கு சென்று விட்டு, நாளை (இன்று) காலை மீண்டும் போராட்டத்தில் பங்கேற்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, பெண்கள் அனைவரும் கலைந்து செல்ல ஆண்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

மனித உரிமை மீறல் பொதுமக்கள் ஆவேசம்

போராட்ட பந்தல் அருகே, பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்ட பந்தலில் பயன்படுத்துவதற்காக பொதுமக்கள் மொபைல் டாய்லெட் கொண்டு வந்தனர். இதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஆவேசம் அடைந்த பெண்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மிகவும் மோசமான மனித உரிமை மீறல் என்று வார்த்தைகளால் சாடினர். இதனையடுத்து, சில நிமிடங்களில் மொபைல் போன் 'டாய்லெட்' அனுமதிக்கப்பட்டது. இது தொடர்பாக, போலீசார் மீது வழக்கு தொடர்வது என்றும் போராட்டக் குழு தீர்மானித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை