உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோடைக்கால ஆர்டருக்கு மாறிய ஏற்றுமதியாளர்கள்

கோடைக்கால ஆர்டருக்கு மாறிய ஏற்றுமதியாளர்கள்

திருப்பூர்: கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆர்டர்கள் அனுப்பிய பிறகு, கோடைக்கால ஆர்டர் மீதான உற்பத்தி, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்களில் துவங்கியுள்ளது. நம் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், திருப்பூரில் உற்பத்தியாகும் பின்னலாடைகளும், பருத்தி நுாலிழை உள்ளாடைகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போது வங்கதேசத்தின் தரைவழி போக்குவரத்து ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு சந்தைகள் சாதகமாக மாறியுள்ளன. குறிப்பாக, தீபாவளி ஆர்டர்கள், நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, திருப்பூரில் புதிய வசந்தத்தை ஏற்படுத்தியதாக, விற்பனையாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். புதிய ஆர்டர் வரத்து எப்போது? பரபரப்பான தீபாவளி ஆர்டர் முடிந்த பிறகு, உற்பத்தியும், வர்த்தகமும் மந்தமாகியுள்ளது. மழை மற்றும் குளிர் பருவம் என்பதால், நாடு முழுவதும் உள்ளாடைகள் விற்பனை மந்தமாகியுள்ளது; இதனால், புதிய ஆர்டர் வரத்து துவங்கவில்லை. மழை மற்றும் குளிர்காலங்களில் பயன்படுத்தும், உல்லன் போன்ற ஆடைகளுக்கு தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, தீபாவளிக்கு பிறகு, உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள், உல்லன் போன்ற கெட்டியான பின்னல் துணியில் ஆடை தயாரிக்கும் ஆர்டர்களை பெற்று, உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றனர். கோடைக்கால விற்பனை, பிப்., மாதத்துக்கு பிறகே துவங்கும்; அதன் பிறகுதான், திருப்பூருக்கான ஆர்டர்களும் அதிகம் வரத்துவங்கும் என, உற்பத்தியாளர் கூறுகின்றனர். பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தை பொறுத்தவரை, தீபாவளி நேரத்தில், கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆர்டர்கள் முக்கியமானவை. அதன்படி, கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆர்டர்கள் அனுப்பும் பணியும் நிறைவு பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இருந்து கோடைக்கால ஆர்டர் வரத்து துவங்கிவிட்டது. வழக்கமாக, இந்தியாவின் பருத்தி நுாலிழை பின்னலாடைகளுக்கு, வெளிநாடுகளில் வரவேற்பு அதிகம். குறிப்பாக, கோடைக்கால ஆர்டர்கள்தான் அதிகம் திருப்பூருக்கு கிடைக்கிறது. அதன்படி, புதிய கோடைக்கால ஆர்டர் உறுதியானதும், உற்பத்தியை துவக்க, ஏற்றுமதி நிறுவனங்களும் ஆயத்தமாகி வருகின்றன. ஒரே மாதிரியான ஆடை அணியும் நிலை மாறியது ஒரேமாதிரியான ஆடை அணியும் நிலை, மக்களிடையே மாறிவிட்டது; குளிர், கோடை மற்றும் மழை காலத்துக்கு ஏற்றவாறு, ஆடை அணியும் பழக்கம் அனைத்து மாநிலங்களிலும் வந்துவிட்டது. இது, பின்னலாடை உற்பத்தியாளருக்கு புதிய வாய்ப்பாகவும் மாறியுள்ளது. தற்போது ஆர்டர் இல்லாமல் மந்தநிலை நிலவுகிறது; இருப்பினும், சமீபமாக, குளிர் மற்றும் மழைக்கால ஆர்டர்களை பெற்று உற்பத்தி நடந்து வருகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு, கோடைக்கால ஆர்டர் கைக்கு வந்துவிட்டது; உற்பத்தியையும் துவக்கிவிட்டனர். - பின்னலாடை உற்பத்தியாளர்கள். அமெரிக்க ஆர்டர் என்னவாகும்? திருப்பூரின் கோடைக்கால ஆர்டரில், அமெரிக்கா தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தது; வரி உயர்வு காரணமாக, புதிய வர்த்தக விசாரணை குறைந்துவிட்டது; பழைய ஆர்டர்களே தேக்கமடைந்துள்ளன. இதனால், புதிய கோடைக்கால ஆர்டர்களை, மற்ற நாடுகளில் இருந்து பெற, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியாளர் களமிறங்கியுள்ளனர். ஒரு சில பெரிய நிறுவனங்கள் மட்டும், அதிகபட்சமாக, 20 சதவீதம் வரை, தள்ளுபடி சலுகையுடன் வர்த்தகம் செய்து, பழைய வர்த்தக தொடர்பை தக்கவைக்க தயாராகிவிட்டனர். எப்படியும், அடுத்த ஆர்டருக்குள், சுமூக உடன்படிக்கை உருவாகும் என்ற நம்பிக்கையை திருப்பூர் கைவிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ