35 தென்னை மரங்கள் மறுநடவு மரங்களை காப்பாற்றிய விவசாயி
பல்லடம்: பல்லடத்தில், புதிய பைபாஸ் பணிக்கு இடையூறாக இருந்த, 35 தென்னை மரங்கள் வேருடன் பெயர்த்து எடுக்கப்பட்டு மறுநடவு செய்யப்பட்டது. பல்லடத்தில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்லடம் -செட்டிபாளையம் ரோடு, சின்னியகவுண்டம்பாளையம் முதல்; பல்லடம்- தாராபுரம் ரோடு, ஆலுாத்துப்பாளையம் பிரிவு வரை, 7.5 கி.மீ., துாரத்துக்கு, புதிய புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, இடையூறாக உள்ள மரங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை அகற்றும் பணி துவங்கி உள்ளது. இவ்வாறு, பல்லடம்- உடுமலை ரோடு, வடுகபாளையம் புதுாரை சேர்ந்த சங்கரப்பன் மகன் தங்கவேல், 62 என்பவருக்கு சொந்தமான நிலத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இவற்றில், 35 தென்னை மரங்கள் அகற்றப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. இவற்றுக்கு மறுவாழ்வு அளிக்க தங்கவேல் தீர்மானித்தார். தங்கவேல் கூறியதாவது: எனது நிலத்தில், நுாற்றுக்கு மேற்பட்ட தென்னை மரங்களை, கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வருகிறேன். இதில், புறவழிச்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் உள்ள, 35 தென்னை மரங்களை எடுக்க வேண்டிய கட்டா யம் ஏற்பட்டது. மரங்களை வேருடன் பெயர்த்து எடுத்து மறு நடவு செய்யும் தொழில்நுட்பம் இருப்பதை அறிந்து, சுல்தான்பேட்டையைச் சேர்ந்த ஜே.சி.பி., உரிமையாளர் கனகராஜை வரவழைத்தேன். அவரது அறிவுறுத்தலின் பேரில், 35 தென்னை மரங்கள் வேருடன் பெயர்த்து எடுக்கப்பட்டு, மாற்று இடத்தில் மறு நடவு செய்யப்பட்டன. மரங்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான மரங்கள் மறு நடவு செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்கு, முறையாக தண்ணீர் ஊற்றி பராமரிப்பதன் மூலம், 95 சதவீதம் அவற்றுக்கு மறுவாழ்வு கிடைக்கும். இவ்வாறு புறவழிச்சாலைக்கு இடையூறாக இருந்த, 35 தென்னை மரங்கள் மறு நடவு செய்யப்பட்டன. இதன் வாயிலாக, மரங்களை அழிவிலிருந்து காக்கலாம்' என்றார்.