கிராம குளங்களுக்கு தண்ணீர் கொடுங்க! அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
உடுமலை; நிலத்தடி நீர் மட்டம் உயர, கிராம குளங்களுக்கு பாசன திட்டத்தின் கீழ், தண்ணீர் திறக்க வேண்டும், என, அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.உடுமலை ஊராட்சி ஒன்றிய கிராமங்களில், 118 குளம், குட்டைகளும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், 74 குளங்களும் உள்ளன.மழை காலத்தில் மட்டும் நீர் வரத்து இருக்கும் இக்குளங்களே, அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக உள்ளன.கடந்த ஓராண்டுக்கும் மேலாக, போதிய மழைப்பொழிவு இல்லாததால், அனைத்து குளங்களும் வறண்டு காணப்படுகின்றன. கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு கூட குளங்களில், தண்ணீர் இல்லை.இப்பிரச்னையை சமாளிக்க, திருமூர்த்தி அணையிலிருந்து கிராமப்புற குளங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும், என, விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில், ஒரு சுற்று மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. பிரதான கால்வாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால், பாசன காலம் நீட்டிக்கப்பட்ட போது, ஆயக்கட்டு பகுதியிலுள்ள குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர்.ஆனால், பாசன நிலங்களுக்கே, கூடுதல் திறப்பில் தண்ணீர் வழங்கப்படவில்லை; குளங்களையும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை.விவசாயிகள் கூறியதாவது: கடந்தாண்டு ஏற்பட்ட வறட்சியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது; இந்தாண்டும் பிரச்னையை தவிர்க்க தற்காலிக தீர்வாக குளங்களுக்கு தண்ணீர் வழங்கலாம். குளங்களில் தண்ணீரை தேக்கினால், பல மாதங்களுக்கு, நிலத்தடி நீர் மட்டம் சரியாமல் இருக்கும்.தற்போது, இரண்டாம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. அணையின் நீர்மட்டமும் திருப்திகரமாக உள்ளது. எனவே, ஆயக்கட்டு பகுதி மட்டுமல்லாது, பிற பகுதிகளிலுள்ள குளங்களுக்கும் நீர் வழங்கினால், பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு, கூறினர்.