திருப்பூர்; ஊத்துக்குளி பகுதியில் நாய்கள் கடித்து, ஆடுகள் பலியாவது தொடரும் நிலையில், பொறுமையிழந்த விவசாயிகள், நேற்று தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.திருப்பூர் காங்கயம், தாராபுரம், வெள்ளகோவில் உள்ளிட்ட இடங்களில், நாய்களால் ஆடுகள் கடிபட்டு, பலியாகும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. 'இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்' என, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 'நாய்கள் கடித்து பலியாகும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' எனவும், விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், ஆறுதல் அளிக்கும் தகவல்கள், உத்தரவு எதுவும், அரசின் சார்பில் வராத நிலையில் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.இந்நிலையில், ஊத்துக்குளி பகுதியில் கடந்த, 8 நாட்களாக நாய்கள் கடித்து ஆடுகள் பலியாவது தொடர்கிறது. நேற்று, இச்சிபாளையம் கிராமத்தில், விவசாயி ஒருவரின், 3 ஆடுகள் நாய்கள் கடித்ததில் பலியாகின; சில நாட்களுக்கு முன், கோரமடைக்காடு பகுதியில், நாய்கள் கடித்து, விவசாயி ஒருவரின், 11 ஆடுகள் பலியாகின. இந்த சம்பவம் தொடர்கதையாகி வரும் நிலையில் பொறுமையிழந்த விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும், நேற்று மதியம், ஊத்துக்குளி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.விவசாயிகளை போலீசார் சமாதானப்படுத்த முயற்சித்தனர். இருப்பினும், நீண்ட நேரமாக அதிகாரிகள் யாரும் வராத நிலையில், தெரு நாய்கள் விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து, அதிகாரிகள் நேரில் வந்து தெளிவுப்படுத்த வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தினர். அதிகாரிகள் கூறுகையில், 'நாய்கள் கடித்து இறக்கும் ஆடுகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக, மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது,' என்றனர்.---
தெரு நாயா?
வளர்ப்பு நாயா?விவசாயிகளின் போராட்டத்தின் போது, அதிகாரி கூறுகையில், 'ஆடுகளை கடிப்பது, தெரு நாயா அல்லது வளர்ப்பு நாயா என்பதை அறிந்து கொள்ள முயற்சிக்கு வேண்டும். வளர்ப்பு நாய் காரணமாக இருந்தால், நாயின் உரிமையாளருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும்' என்றார். 'ஆனால், ஆடுகளை கடிப்பது, தெரு நாயா, வளர்ப்பு நாயா என்பதை அடையாளம் காணும் சூழல் இல்லை. நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் தான் நாய்கள் ஆடுகளை கடிக்கின்றன' என, விவசாயிகள் தெரிவித்தனர்.