பசுந்தீவனம் விளைச்சல்; விவசாயிகள் நிம்மதி
பொங்கலுார்: பல மாதங்களாக நிலவிய கடும் வறட்சி காரணமாக பசுந்தீவனம் கிடைக்காமல் கால்நடை விவசாயிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வந்தனர். கால்நடைகளுக்கு கழிவு பஞ்சு, அடர் தீவனம் போன்றவற்றை அதிக விலைக்கு வாங்கி கொடுத்து கால்நடைகளை காப்பாற்றி வந்தனர். தீவன செலவு அதிகரித்ததால் கால்நடை மூலம் வரும் வருமானம் குறைந்தது. விவசாயிகள் மழைக்காக ஏங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால், இயற்கையாக வளரும் கொழுக்கட்டை, அருகு, கோரை உள்ளிட்ட தாவரங்கள் வேகமாக வளர துவங்கி உள்ளன. பசுந்தீவன பற்றாக்குறை நீங்கியுள்ளதால், பொங்கலுார் வட்டார கால்நடை விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.