தோண்டுவதும் மூடுவதும் தான் வேலையா? எப்ப தான் முடிப்பீங்க... பொதுமக்கள் கேள்வி கே.எஸ்.சி., பள்ளி வீதியில் நீடிக்கும் அவதி
திருப்பூர்;திருப்பூர், 44வது வார்டு, கே.எஸ்.சி., பள்ளி வீதியில், குழாய் பதிப்பு பணி தாமதமாவதால், பல தரப்பினரும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி, 44வது வார்டுக்கு உட்பட்ட கே.எஸ்.சி., பள்ளி வீதி, தாராபுரம் ரோட்டை இணைக்கும் வகையில் முக்கியமான ரோடாகவும், பல்வேறு கோவில்கள், பள்ளிகள், கடை வீதிகள், வர்த்தக மையங்கள் அமைந்துள்ள ரோடாகவும் உள்ளது.இந்த ரோட்டில் பாதாள சாக்கடை திட்டம், 4வது குடிநீர் திட்டம், 24 மணி நேர குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், குழாய் பதிப்பு பணிகள் பல மாதங்களாக இழுவையாக உள்ளது. இதனால், ரோடு தோண்டி போடப்பட்டும், குழாய் பதிக்கும் பணி முடியாமல் தோண்டிய குழிகள் மூடப்படாமலும் பெரும் சிரமம் நிலவுகிறது. தினமும் பல்லாயிரம் மக்கள், ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தும் முக்கியமான ரோடு, பயன்படுத்த முடியாத காரணத்தால், மாற்றுப்பாதையாக உள்ள பிற குறுக்கு வீதிகள், சந்து வழியாகவும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு குழாய் பதிக்க குழி தோண்டிய போது, பாதாள சாக்கடை குழாய்கள் சேதமடைந்து கழிவு நீர் ரோட்டில் பாய்ந்தது. குடிநீர் குழாய்கள் சேதமடைந்து குடிநீர் ஒரு புறத்தில் வீணாகியது. இதனால் சில பகுதி சேறும் சகதியுமாகவும், ரோடு தோண்டிக் கிடப்பதால் ஒரு பகுதி துாசி பறந்து புழுதிக்காடாகவும் மாறி காட்சியளிக்கிறது.இந்த ரோட்டைக் கடந்து செல்வதற்குள் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் சொல்ல முடியாத துயரங்களைச் சந்திக்கும் நிலை உள்ளது. எனவே, இது விஷயத்தில், கமிஷனரும், மேயரும் தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் ஒரு தீர்வு காண வேண்டும்.
ஒப்பந்ததாரர் அலட்சியம்
அப்பகுதி கவுன்சிலர் கண்ணப்பன் கூறியதாவது:பல மாதமாக ஒப்பந்த நிறுவனம் உரிய வகையில் பணி செய்யாமல் நிர்வாகம் வழங்கிய நிதியும் வீணாகிறது. மக்களும் துன்பப்படுகின்றனர். இரவு பகலாக உடனிருந்து பணிகளை முடுக்கி வருகிறேன். இருப்பினும் பொறுப்பற்ற முறையிலும், மெத்தனமானவ முறையில் பணி நடக்கிறது. என்னை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லாமல் பணிகளை செய்து முடிக்க அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.