| ADDED : டிச 05, 2025 08:01 AM
பல்லடம்: பல்லடம் அடுத்த, கம்மாளப்பட்டியை சேர்ந்த தங்கராஜ் என்பவர், நேற்றுமுன்தினம் மாலை, 6.15க்கு, கரடிவாவி - - காமநாயக்கன்பாளையம் சாலையில் காரில் சென்றபோது, சிறுத்தை ஒன்று, ரோட்டை கடந்து சென்றதாக கூறி, ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இது, சமூக வலை தளங்களில் வைரலானது. மல்லேகவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரோகிணி மற்றும் சிலர், டூவீலரில் சென்றபோது, விவசாய நிலத்துக்குச் செல்லும் மண் பாதை ஒன்றில் சிறுத்தை நின்றதாகவும், திடீரென மறைந்ததாகவும் கூறினர். நேற்று காலை, திருப்பூர் மாவட்ட வனத்துறையினர், கரடிவாவியில் முகாமிட்டனர். சிறுத்தையை பார்த்ததாக கூறிய தங்கராஜ், ரோகிணி உள்ளிட்டோர் வரவழைக்கப்பட்டனர். விளை நிலங்கள், வனப்பகுதிகளில் சிறுத்தையின் கால்தடம் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். மான் மற்றும் நாய்களின் காலடித்தடங்கள் மட்டுமே உள்ளதாகவும், சிறுத்தை வந்து சென்றதற்கான அடையாளங்கள் இல்லை எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே கரடி வாவி அரசு மருத்துவமனைக்கு பின்புறம் சிறுத்தை வந்து சென்றதாக கூறப்பட்ட நிலையில், டாக்டர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரிடமும் வனத்துறையினர் விசாரித்தனர். ''சிறுத்தை வந்ததற்கான தடயங்கள், ஆதாரங்கள் எதுவும் இல்லை; பொதுமக்கள் தேவையின்றி பீதி அடைய வேண்டாம்'' என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.