கால்நடை காப்பீடு மானியம்; விவசாயிகள் ஒருமித்த குரல்
திருப்பூர்; ''அனைத்து கால்நடைகளுக்கும், காப்பீட்டு மானியம் வழங்க வேண்டும்'' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், நேற்று ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் தலைமை வகித்தார். தாசில்தார் கனகராஜ், கடந்த முறை கூட்டத்தில் பெற்ற மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து பேசினார்.விவசாயிகள் பேசியதாவது:*கிருஷ்ணசாமி, விவசாயி:கால்நடைகளுக்கு காப்பீடு செய்வதில் மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகின்றன. பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுக்கும், மிக குறைவான கால்நடைகளுக்கு மட்டுமே மானியம் கிடைக்கிறது. கால்நடைகளை நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள, தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும். அனைத்து கால்நடைகளுக்கும், காப்பீட்டு மானியம் வழங்க வேண்டும். கோமாரி நோய் பரவி வருவதால், விரைவில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட வேண்டும். * திருப்பூர் வடக்கு ஒன்றிய குழு செயலாளர் அப்புசாமி, ஒன்றிய குழு செயலாளர், திருப்பூர் வடக்கு ஒன்றியம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்:திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, புது பஸ் ஸ்டாண்ட், பெருமாநல்லுார், ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி வெள்ளியம்பாளையம், தட்டான்குட்டை வழியாக, 10ஏ, 45 ஏ, 45 பி, 45 டி ஆகிய டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராமப்புற மக்கள் வெள்ளியம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நின்று, பஸ் ஏறி சென்று வந்தனர். கடந்த மாதங்களாக, வெள்ளியம்பாளையத்தில் பஸ்கள் நின்று செல்வதில்லை. அனைத்து பஸ்களும், வெள்ளியம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம்: விவசாயிகளின் கோரிக்கையை, குறைகேட்பு நாள் கோரிக்கையாக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அரசு திட்டங்கள் குறித்து, துறைவாரியான அலுவலர்கள், குறைகேட்பு கூட்டத்தின் போது, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.----திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் தலைமையில் நடந்தது.
சிறிய வேளாண் கருவிகளுக்கு மானியம் வழங்கப்படுமா?
பொன்னுசாமி, தலைவர், மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் விவசாயிகள் நல சங்கம்:கடந்த முறை தள்ளுபடி செய்த மனுக்களை பரிசீலித்து, பிரதமரின் விவசாயிகள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில், நலிவடைந்த குறு, சிறு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க, மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும். திருப்பூர் தெற்கு தாலுகாவை பிரித்து, செவந்தாம்பாளையத்தில் அலுவலகம் கட்டியது முறையானது அல்ல. கடந்த, 10 ஆண்டுகளாக, போதிய பஸ் வசதி இல்லாத இடத்தில், தெற்கு தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது; போதிய பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். போதிய வருவாய்த்துறை அலுவலர்களை நியமிக்க வேண்டும். குறு, சிறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், மினி டிராக்டர், சிறிய களை எடுக்கும் கருவி போன்ற சிறிய கருவிகளை, மானியத்துடன் வழங்க வேண்டும்.