தேசிய ரோபோடிக்ஸ் ஸ்ரீநாச்சம்மாள் வித்யவாணி மாணவர்கள் இரண்டாமிடம்
திருப்பூர்; அவிநாசி, தேவராயம்பாளையம் ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் புதுடில்லி நொய்டா விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற ரோபோடிக்ஸ் சர்வதேச கண்காட்சியில் (Technoxion world cup 9.0) பங்கேற்று இரண்டாம் இடம் பெற்றனர். இப்போட்டி ஐந்து பிரிவுகளாக நடந்தது. அதில், 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில், குழு ரோபோ ரேஸ், தன்னாட்சி ரோபோ சுமோ சேலஞ்ச், வேகமான லைன் பாலோவர் மற்றும் புதுமை சவால் ஆகியவற்றில், ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். பள்ளியின், 'எஸ்.என்.வி.வி ரோபோ ஸ்குவாட்ஸ்' குழுவின் சார்பாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் ஜகத்ராம், தருண் சஞ்சய், முகமது ரோஷன், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் நித்தேஷ், திரிஷ்தேவ், பிரணவ் மற்றும் எட்டாம் வகுப்பு சாய் பிரணவ் ஆகியோர் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும் அதிக புள்ளிகள் பெற்று 'ரோபோ சுமோ அட்டானமஸ் பாட் சேலஞ்' போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் ஜகத்ராம் மற்றும் தருண் சஞ்சய் இரண்டாம் இடம் பெற்று, 40 ஆயிரம் பரிசுத்தொகையை வென்றனர். போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே பாராட்டி, பரிசு வழங்கினார். பள்ளி செயலாளர் அக் ஷயா விக்ரம், பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் உடனிருந்து ஊக்குவித்தனர்.