முப்பெரும் தேவியரை போற்றும் நவராத்திரி: வீடுகளை அலங்கரிக்கும் கொலு பொம்மைகள்
வரும் அக்., 2ம் தேதி மகாளயபட்சம் நிறைவடைந்து, மறுநாளில் இருந்து நவராத்திரி விழா துவங்குகிறது. முப்பெரும் தேவியரை வழிபடும், நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவில்கள் மற்றும் வீடுகளில், கொலு வைத்து பெண்கள் வழிபடுகின்றனர். ஓரறிவுள்ள ஜீவராசிகளில் துவங்கி, மனிதர்கள், முனிதர்கள், தேவர்கள், தெய்வங்களின் பொம்மைகளை வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. தமிழர் வாழ்வில் பண்பாட்டை சித்தரிக்கும் வகையிலான, விழாக்கள், சுப நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களை காட்சிப்படுத்தும் கொலு பொம்மைகள் பிரதானமாக இடம்பெறுகின்றன.திருப்பூரில் உள்ள கடைகளில், கொலு பொம்மை விற்பனை களைகட்டியிருக்கிறது. மதுரை சுற்றுப்பகுதிகளில் விற்கப்படும் பொம்மைகள், 50 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை விற்பனைக்கு வந்துள்ளன. வைகுண்டம் செட், கல்யாண செட், லலிதாம்பிகை செட், ரிஷப வாகனம், தாயாருடன் பெருமாள் அருள்பாலிக்கும் உருவங்கள், களிங்கநடனம், பால விநாயகர், மீனாட்சி, சிவகுடும்பம், ஆண்டாள், அர்த்தநாரீஸ்வரர் என, பல்வகையான பொம்மைகள், திருப்பூர் மக்களை கவர்ந்துள்ளன. நவராத்திரி கொலு துவங்கி மூன்றே நாட்கள் இருப்பதால், கொலுபொம்மைகள் விற்பனை, கடைகளில் களைகட்டியிருந்தது.