திருப்பூர்:கட்டட பணி நிறைவு சான்றிதழ் (பி.சி.சி.,) பெறும் உத்தரவுக்கு, தமிழக அரசு மாற்று வழிகண்டு, குறு, சிறு தொழில்கள், கடை நடத்துவோரின் பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.-கோர்ட் வழக்கு உட்பட பல்வேறு காரணங்களால், 2019 ஜூன் 1ம் தேதி முதல், வீடு, கடை, வணிக வளாகம், தொழிற்சாலை கட்டடங்களுக்கு, பணி நிறைவு சான்றிதழ் பெற்றால் மட்டுமே, மின் இணைப்பு வழங்க முடியுமென அறிவிக்கப்பட்டது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, இந்த அறிவிப்பு கடுமையாக்கப்படவில்லை. நடப்பு தி.மு.க., ஆட்சியில், 2021 முதல், கட்டட பணி நிறைவு சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டதால், ஒவ்வொரு தொகுதியிலும், 5,000க்கும் அதிகமான கட்டடங்கள் மின் இணைப்பு பெற முடியாமல் நிற்கின்றன.பொதுமக்கள் நலன்கருதி, மூன்று வீடுகள்; 40 அடி உயரம் வரை கட்டிய வீடுகள், 7,500 சதுரடிக்கு குறைவான வீடுகள் என, மூன்று விதிமுறைகளுக்கு உட்பட்ட வீடுகளுக்கு மட்டும், பணி நிறைவு சான்றிதழ் இல்லாமல், மின் இணைப்பு வழங்கப்படுகிறது. மற்ற எந்தவொரு கட்டடத்துக்கும் மின் இணைப்பு இதுவரை கிடைக்கவில்லை. தொழிலுக்கு நெருக்கடி
இதனால், கடை, வணிக வளாகம் மற்றும் தொழிற்சாலை கட்டியவர்கள், மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடை (டேரிப் 5) மின் இணைப்பு பெற்றால், ஒரு கிலோவாட், 200 ரூபாய், ஒரு யூனிட்டுக்கு, 9.50 ரூபாய், 18 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்தினால் போதும்.சிறு தொழிற்சாலை இணைப்புகளுக்கு, யூனிட்டுக்கு 7.50 ரூபாய், ஒரு கிலோவாட் 150 ரூபாய், 18 சதவீதஜி.எஸ்.டி., மட்டும் செலுத்தினால் போதும். மாறாக, இணைப்பு பெற முடியாததால், தற்காலிக மின் இணைப்புக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.கட்டட பணியை துவங்கும் போதே, தற்காலிக மின் இணைப்பு பெற வேண்டும். அதற்கு, யூனிட்டுக்கு, 12 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிலை கட்டணம், கிலோவாட்டுக்கு, 1100 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரண மாக, மின் கட் டணத்துக்கே பெரும் தொகையை செலவிட வேண்டிய நெருக்கடி நிலவுகிறது.தொழில்துறையினர் உடனான பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளது. திருப்பூர் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் இப்பிரச்னை நிலவுகிறது. சிறிய கடை மற்றும் சிறு தொழில்புரிவோரும், பெரும் தொகையை மின் கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது.எனவே, சிறப்பு கவனம் செலுத்தி, பணி நிறைவு சான்றிதழ் பெறாத கட்டடங்களுக்கு, கட்டண அடிப்படையில் அனுமதி வழங்கி, மின் இணைப்பு பெற வழிவகை செய்ய வேண்டும் என, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தமிழக முதல்வருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னாள் முதல்வர்வழிகண்டார்...
கடந்த, 2007ம் ஆண்டில், அனுமதி பெறாத வீட்டுமனைகள் மற்றும் அவற்றில் உள்ள கட்டடங்களுக்கு மின் இணைப்பு பெற முடியாத சூழல் இருந்தது.அப்போதைய முதல்வர் கருணாநிதி, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, சிறிய அபராத கட்டணத்தை செலுத்தி, மனையை வரன்முறை செய்ய வழிவகை செய்தார்.இதனால், அனுமதியில்லாத வீட்டுமனைகள் அங்கீகாரம் பெற்று, மின் இணைப்பும் பெற முடிந்தது. முன்னாள் முதல்வரின் ஐடியாவை பயன்படுத்தி, தற்போதைய முதல்வரும் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது, பொதுமக்களின் எதிர்பார்ப்பு.இன்று, நேற்றல்ல, கடந்த மூன்று ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு, இனியாவது தமிழக அரசு தீர்வு காணுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக அரசு, வரும் பட்ஜெட் கூட்டத்தில், சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி, மாற்று வழியை கண்டறிந்து செயல்படுத்த முன்வர வேண்டும்