சிதிலமடைந்து காணப்படும் நுாலகம் அரசு நடவடிக்கை எடுக்க வாசகர்கள் வலியுறுத்தல்
உடுமலை, ; உடுமலையில், சிதிலமடைந்து காணப்படும் கிளை நுாலகத்தை, புதுப்பிக்க வேண்டும், என வாசகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை காந்திநகரில், 3வது கிளை நுாலகம் அமைந்துள்ளது. இந்த நுாலக கட்டடம், கடந்த, 1993ம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இங்கு, 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுால்கள் மற்றும் 7 ஆயிரம் வாசகர்கள் என பெரிய அளவிலான நுாலகமாக உள்ளது.கடந்த, 2004ம் ஆண்டு மேல் தளம் கட்டப்பட்டு, தினசரி நாளிதழ்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு வசதிகள் செய்யப்பட்டதோடு, இணையதள வசதியுடன், 5 கம்ப்யூட்டர்கள் உள்ளன.நுாலக கட்டடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், முறையாக பராமரிக்காததால், பக்கவாட்டு சுவர்கள் விரிசல் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.மேல் தளம், பழுதடைந்து மழை பெய்தால், மழை நீர் உள்ளே புகுந்து பாதிப்பு ஏற்படுத்துகிறது. கடந்த, 2017ம் ஆண்டு, சுற்றுச்சுவர் விழுந்த நிலையில், இதுவரை புதுப்பிக்காமல் உள்ளது.உடுமலையில், பசுமையான மரங்களுடன், அமைதியான சூழலில், பள்ளி, கல்லுாரிகள், குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த நுாலகத்தை, தினமும் நுாற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், கட்டடங்கள் பழுதடைந்துள்ளதால் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த நுாலகத்தை, உடனடியாக புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.