கொழுமம் ரோடு பிரிவில் வேகத்தடை அமையுங்க
உடுமலை, ; உடுமலை, பழநி ரோட்டில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. நெடுஞ்சாலையாக இருப்பதால் வாகனங்கள் அதிவேகத்தில் தான் செல்கின்றன. இருப்பினும், நகரப்பகுதிகளிலும் அதே வேகத்துடன் செல்வதால் விபத்துகளும் அதிகரிக்கிறது. குறிப்பாக, கொழுமம் ரோடு பிரிவு அருகே வேகத்தை கட்டுபடுத்த தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பழநி ரோட்டிலிருந்து உடுமலை நோக்கி வரும் வாகனங்கள் தடுப்புகள் பொருட்படுத்தாமல் வருகின்றன. இதனால் ரோட்டை கடப்பதற்கு காத்திருந்து கொழுமம் பிரிவு ரோட்டுக்கு செல்லும் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். தடுப்புகள் இருப்பதால், உடுமலையிலிருந்து கொழுமம் பிரிவுக்கு செல்லும் வாகன ஓட்டுநர்கள், பழநி ரோட்டிலிருந்து வரும் வாகனத்தையும் கவனிக்காமல் செல்வதும் தொடர்ந்து நடக்கிறது. அப்பகுதியில் வாகனங்களின் வேகத்தை கட்டுபடுத்த ரோட்டில் வேகத்தடைகள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.