அரிவாளுடன் சுற்றித்திரிந்த நபர் எஸ்.பி., அலுவலகம் விளக்கம்
திருப்பூர் : திருப்பூர் அடுத்த நாச்சிபாளையம் பகுதியில் இரவு நேரத்தில் கையில் அரிவாளுடன் ஒருவர் சுற்றித் திரிந்துள்ளார்.வீடுகள் முன்பிருந்த கண்காணிப்பு கேமராக்களில் இந்த பதிவு இருந்தது. இந்த தகவல், 'கையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த முகமூடி கொள்ளையன்; பொதுமக்கள் அச்சம்' என்ற வகையில் பரவியது.இது குறித்து எஸ்.பி., அலுவலகம் வெளியிட்ட விவரம்:கடந்த 17 ம் தேதி அதிகாலை 5:00 மணியளவில், கையில் அரிவாளுடன் ஜி.என்., கார்டன் பகுதியில் சுற்றி வந்த ஒரு நபரை பொதுமக்கள் பிடித்து அவிநாசிபாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.போலீஸ் விசாரணையில் அவர் அருகேயுள்ள பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்; கடந்த ஒரு மாதமாக மனநிலை சரியில்லாமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அன்று அதிகாலை அவர் தன் வீட்டிலிருந்து ஜிம்முக்கு செல்வதாக கூறி விட்டு பைக்கில் வந்துள்ளார். தனது தாத்தா வீட்டுக்கு வந்த அவர் அங்கிருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு செய்வதறியாமல் அங்கும் இங்கும் சுற்றி வந்துள்ளார்.உரிய விசாரணைக்குப் பின் அவர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.