உலக அறிவை அள்ளித்தந்த பட்டம்; வாழ்வில் உயர மாணவர்கள் நாட்டம்
திருப்பூர்; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி - வினா போட்டியில் மாணவ, மாணவியர் திறமையை வெளிக் காட்டினர்.கடந்த, 2018ம் ஆண்டு முதல், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், வினாடி - வினா போட்டி நடத்தப்படுகிறது. மாணவர்களை தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் வகையிலும், புத்தகப் படிப்புடன் மாணவர்களுக்கு பொது அறிவு உள்ளிட்ட கற்றல் சார்ந்த தேடலை ஊக்குவிக்கும் வகையிலும், இப்போட்டி நடத்தப்படுகிறது.இந்தாண்டு வினாடி - வினா போட்டி, 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில் நடைபெற்று வருகிறது. எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் கை கோர்த்துள்ளது. சத்யா ஏஜென்சிஸ் இணைந்து நடத்துகிறது.கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த, 150க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இப்போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர் இடையே அரையிறுதி போட்டி நடைபெறும்.இதில் இருந்து, எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதி போட்டி நடத்தப்பட உள்ளது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் காத்திருக்கின்றன.அவ்வகையில், திருப்பூர், அவிநாசி ரோடு, ஆஷர் நகரில் உள்ள வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளியில் வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. தகுதிச் சுற்றுக்கான போட்டியில், 229 மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்று பொது அறிவாற்றலை வெளிக்காட்டினர்.இவர்களில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் ஆங்கில அகர வரிசையில், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு இவர்களுக்கு இடையே வினாடி - வினா போட்டி நடத்தப்பட்டது. மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில், 'சி' அணியில் இடம் பெற்ற பிளஸ் 1 வகுப்பு மாணவி மணிஷா, ஒன்பதாம் வகுப்பு மாணவி கிருஷ்ணயாழினி ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.முதலிடம் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கு வித்யா மந்திரி பள்ளி நிர்வாக இயக்குனர் காயத்ரி விவேகானந்தன், பள்ளி முதல்வர் புஷ்பலதா, துணை முதல்வர் சித்ராதேவி, வினாடி - வினா ஒருங்கிணைப்பாளர்கள் உத்திரராஜ், புகழேந்தி, சந்தானதேவி, பாலாமணி ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழை மாணவ, மாணவியருக்கு வழங்கினர்.