திருப்பூர்: 'ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தை மேம்படுத்துவதுடன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வேகம் கூட்டுவதாக இருக்கும்,' என, திருப்பூர் தொழில்துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அமெரிக்க வரி விதிப்பு காரணமாக, ஏற்றுமதி வர்த்தகம் சுணக்கத்தில் சிக்கியது; அதிலிருந்து மீண்டு வரவும், தொழில் வாய்ப்புகளை தக்கவைக்கவும், மத்திய அரசு புதிய நிதி திட்டங்களையும், சலுகைகளையும் வழங்க வேண்டுமென, ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை வைத்தனர். அரசு பிரதிநிதிகளும், நேரில் சந்தித்து கோரிக்கையை கேட்டறிந்தனர். இந்நிலையில், மத்திய அமைச்சரவை முடிவின்படி, 45,060 கோடி ரூபாய் மதிப்பிலான, ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் மற்றும் கடன் உத்தரவாத திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், விரைவில் இத்திட்டம் தொடர்பான வழிகாட்டி அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்தியாவின் ஏற்றுமதி திறனை மேம்படுத்தி, குறு. சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளர்களுக்கு, நிதியுதவி வழங்கும் நோக்குடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையிலும், இந்தியாவின் போட்டித்திறன் இதன்மூலமாக மேம்படும். என்னென்ன பயன்கள்... * ஏற்றுமதியை மேம்படுத்தும் புதிய மையங்கள், வர்த்தக மண்டபங்கள், மற்றும் பிராண்ட் இந்தியா' முயற்சிகளுக்கு நிதி உதவி கிடைக்கும். * சர்வதேச கண்காட்சிகள் மற்றும் ஆன்லைன் வணிக தளங்களில் பங்கேற்கவும், அரசு மானியம் வழங்கி ஊக்குவிக்கும். * ஏற்றுமதி நிறுவனங்கள், வங்கிகளில் கடன் பெறும்போது, அரசு ஒரு உத்தரவாதம் வழங்கும். இதனால், வங்கிகள் நம்பிக்கையுடன் கடன் வழங்கும். த * டெக்ஸ்டைல் துறைக்கு தேவையான முக்கிய கனிமங்களை உள்ளூரில் உற்பத்தி செய்து ஏற்றுமதிக்கு கைகொடுக்கும். * வெளிநாடுகளில் இந்திய துணி மற்றும் நெசவு பொருட்களுக்கான பிராண்டிங் நடவடிக்கை மேம்படும். * திருப்பூர் தயாரிப்புகள் புதிய நாடுகளில், புதிய வாடிக்கையாளர்களை சென்றடையயும் வாய்ப்பு பெருகும். * புதிய தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் பக்கபலமாக இருந்து, பல்வேறு சவால்களை சமாளிக்க புதிய வசதிகள் உருவாகும். * புதிய ஆர்டர்கள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளால், திருப்பூரில் வேலைவாய்ப்பும் உள்நாட்டு பொருளாதாரமும் உயரும். ஏற்றுமதி வலுப்படும் மத்திய பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களுக்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து, 2025-26 முதல், 2030-31ம் ஆண்டு வரையிலான, ஐந்து ஆண்டுகளுக்கு, 25 ஆயிரத்து, 060 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சந்தை அணுகல் திட்டம், வட்டி சமநிலை திட்டம் போன்ற திட்டங்களை ஒருங்கிணைத்து, புதிய டிஜிட்டல் வடிவமைப்பில் புதிய திட்டம் வந்துள்ளது. 'நிர்யாத் புரோத்சாகன்' திட்டம் மூலமாக, குறு, சிறு மற்றும் நடுத்தர ஏற்றுமதியாளருக்கு, குறைந்த வட்டி சலுகையில் நிதியுதவி கிடைக்கும். 'நிர்யாத் திஷா' திட்டத்தால், கண்காட்சி, பிராண்டிங், லாஜிஸ்டிக்கல், திறன் மேம்பாடு போன்ற நிதி சாரா உதவியும் கிடைக்கும். இத்திட்டங்கள், இந்தியாவின் ஏற்றுமதி அமைப்பை வலுப்படுத்தி, பெரிய அளவிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கும். நாட்டின் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சிக்கு புதிய ஊக்கத்தை வழங்கும். - சக்திவேல் ஏ.இ.பி.சி. துணை தலைவர் திருப்பூர் அதிகம் பயன்பெறும் மத்திய அரசு பட்ஜெட்டில், ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது. அத்திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீட்டுக்கு, மத்திய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, கடன் உத்தரவாத திட்டமும், ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்விரு திட்டங்களால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர் அதிகம் பயன்பெறுவர். இருப்பினும், இத்திட்டம் தொடர்பான முழு விவரத்தை பெற்று, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். - சுப்பிரமணியன் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் குறு, சிறு ஏற்றுமதி உயரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த திட்டம், சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, அமெரிக்க வரி உயர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை சமாளித்து, வர்த்தகம் செய்ய முடியும். குறு, சிறு ஏற்றுமதியாளர்களை கொண்ட திருப்பூர் அதிகம் பயன்பெறும். நிதி ஒதுக்கீடு விவரம் தெரியவரும் போது, தகுதியானவர்கள் பயன்பெற முடியும். சவால்களை சந்தித்து வந்த திருப்பூர் இனி வளர்ச்சிப்பாதைக்கு திரும்பும். - இளங்கோவன், 'அபாட்' தலைவர் பொருளாதார வளர்ச்சி மத்திய நிதி அமைச்சர் நடத்திய, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் சந்திப்பில், எங்களது பிரதிநிதி பங்கேற்று, கோரிக்கையை முன்வைத்தார். இத்திட்டங்களில், நம் நாட்டு தயாரிப்புகளை உலக அளவில் ஊக்குவிக்கும் திட்டத்தில், 14 ஆயிரத்து, 659 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது போட்டித்தன்மையை மேம்படுத்தும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பயன்பெற்று, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிப்பாக இருக்கும். திட்டத்தில் மானிய உதவி கிடைப்பதுடன், வட்டி சமன்படுத்தும் திட்டத்திலும் சரியான வட்டி மானிய சலுகையும் கிடைக்கும். - முத்துரத்தினம் 'டீமா' தலைவர் புதிய உயரத்தை நோக்கி... மத்திய அரசின், புதிய திட்டங்களாலும், 45,060 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு காரணமாகவும், இந்தியாவின் ஏற்றுமதி மேம்படும். குறிப்பாக, திருப்பூர் நெசவு மற்றும் ஆடைத் தொழில், நாட்டின் 'மேக் இன் இந்தியா - 'எக்ஸ்போர்ட் பிரம் இந்தியா' நோக்கத்துடன் இணைந்து, உலக சந்தையில் புதிய உயரத்தை அடையும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். - ஜெய்பிரகாஷ் 'ஸ்டார்ட் அப் இந்தியா' ஆலோசகர்.