மேலும் செய்திகள்
கடன் தவணையை கட்டுக்குள் வைத்திருப்பது எப்படி?
01-Sep-2025
திருப்பூர்; திருப்பூரில் கைக்குழந்தையுடன் அழைத்துச்சென்று பெண்ணை மிரட்டிய நால்வர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே காட்டன் மில் ரோட்டை சேர்ந்தவர், 29 வயது பெண்; கடந்த 5ம் தேதி இரவு, பண விவகாரம் தொடர்பாக, நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று, பெண்ணிடம், நான்கு மாத கைக்குழந்தையுடன் தொட்டிய மண்ணரை பகுதிக்கு அழைத்து சென்று தாக்கி, பணம் கேட்டு மிரட்டினர். இதுதொடர்பாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பெண் கடத்தி செல்லப்பட்டதாக புகார் சென்றது. பெண்ணை உடனடியாக மீட்ட போலீசார், நான்கு பேரிடம் விசாரித்தனர். தொட்டிய மண்ணரையை சேர்ந்த வினோத்குமார், 30 என்பவரின் மொபைல் போனில் இருந்து ஆன்லைன் செயலி மூலம், 50 ஆயிரம் ரூபாயை பெண் பெற்றார். மாத தவணை வரும் போது, கடன் பெற்றது குறித்து வினோத்குமாருக்கு தெரிய வந்தது. இந்த பணத்தை கேட்டபோது, அந்த பெண் பணத்தை தராமல் காலம் கடத்தினார். வினோத்குமார் மற்றும் இவரது நண்பர்கள் சிவக்குமார், 30, கார்த்திக், 35, முத்துக்குமார், 42 என, நான்கு பேரும் இதுதொடர்பாக பேச பெண்ணை அழைத்து சென்று தாக்கி, மிரட்டியது தெரிந்தது. பெண்ணை தாக்கி, மிரட்டியது தொடர்பாக, நான்கு பேரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர். பலரிடம் பெண் கைவரிசை போலீசார் கூறியதாவது: பெண்ணை மிரட்டியது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள இந்த வழக்கை ஆழமாக விசாரித்த போது, 'பகீர்' தகவல் தெரியவந்தது. புகார் அளித்த பெண், தெரிந்த நபர்கள், தனக்கு பழக்கமாகும் நபர்களிடம் மென்மையாக பேசியும், அறியாமையை பயன்படுத்தியும், மொபைல் போனை வாங்குகிறார். பின், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமல் செயலி மூலம், 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் பெறுகிறார். மொபைல்போனை வழங்கியவர்களுக்கு, இந்த பெண் தங்கள் மொபைல்போன் எண், தங்கள் பெயரைப் பயன்படுத்தி செயலி மூலம் கடன் பெறுவதும், அதை பெண் தனது கணக்குக்கு மாற்றிக்கொள்வதும் தெரிவதில்லை. கடன் குறித்து தெரிய வந்து கேட்கும் போது, முறையாக பதில் அளிக்காமல், கடனை கொடுக்காமல் தாமதப்படுத்தி வந்தார். அந்த வகையில், கைது செய்யப்பட்ட, நான்கு பேரில் ஒருவர், இந்த பெண்ணிடம் ஏமாந்தது தெரிந்தது. இந்த பணத்தை பெற, பெண்ணை கைக்குழந்தையுடன் இரவு நேரத்தில் அழைத்து சென்று மிரட்டியுள்ளனர். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண், பத்து முதல், 20 பேரிடம் கைவரிசை காட்டியுள்ளார். இவர் மீதான புகார் ஏற்கனவே ஸ்டேஷன்களில் உள்ளது. அதுகுறித்து விசாரித்து, சம்பந்தப்பட்ட பெண் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
01-Sep-2025