சாலை நடுவில் மரக்கன்று வளர்ப்பு: நெடுஞ்சாலைத்துறைக்கு சபாஷ்
திருப்பூர்: திருப்பூர் கோட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையின் மையத் தடுப்பில் மரக்கன்று வளர்க்கும் பணியில் கவனம் செலுத்தப்படுகிறது. தமிழகத்தில், பசுமை பரப்பை அதிகரிக்க செய்யும் நோக்கில், மரக்கன்று வளர்ப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இதில், கிராம ஊராட்சிகளில் நர்சரி அமைத்து, மரக்கன்று உற்பத்தி செய்யவும், வனத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட அரசுத்துறையினர், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், வாய்ப்புள்ள இடங்களில் மரக்கன்று நட்டு வளர்க்கவும், தமிழக அரசு ஊக்குவிப்பு வழங்கி வருகிறது. அந்த வகையில் திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், காங்கயம் உட் கோட்டங்களை உள்ளடக்கிய திருப்பூர் கோட்ட நெடுங்சாலைத்துறை சார்பில் மட்டும், 16 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. முதல் முயற்சியாக, விரிவுபடுத்தப்பட்ட சாலையின் மைய தடுப்பில், குறிப்பிட்ட இடைவெளியில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. அவிநாசி - மேட்டுப்பாளையம் ரோட்டில், கஞ்சப்பள்ளி என்ற இடத்தில், மையத்தடுப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவற்றை பாதுகாக்க கூண்டும் பொருத்தப்பட்டுள்ளது. பசுமையை வளர்த்தெடுக்கும் நெடுஞ்சாலைத் துறையினர் இத்தகைய முயற்சி, மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.