தடையற்ற மின்சாரம்! நவீன தொழில்நுட்பத்தால் சாத்தியமாகிறது; கூடுதல் மின் தேவையும் பூர்த்தியாகும்
திருப்பூர்; திருப்பூர், குமார் நகர் துணை மின் நிலையம், 'ஆட்டோ பவர் டிரான்ஸ்பார்மர்', தொழில்நுட்பத்துடன் திறன் மேம்படுத் தப்பட்டுள்ளது. இதன் மூலம், நகரப்பகுதி மக்களுக்கு, தடையில்லாமல் கூடுதல் மின்சாரம் வழங்க முடியும்.தமிழக சட்டசபை பொது நிறுவனங்கள் குழுவினர் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வை மேற்கொண்டனர். குமார் நகர் துணை மின்நிலையத்தை ஆய்வு செய்தனர். 'ஆட்டோ பவர்டிரான்ஸ்பார்மர்'
மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:'ஆட்டோ பவர் டிரான்ஸ்பார்மர்' தொழில்நுட்பத்தில், திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 29ம் தேதி முதல், புதிய திறனுடன் இயங்கத் துவங்கியுள்ளது.திருப்பூர் துணை மின் நிலையம், குமார் நகர், வேலம்பாளையம், நேதாஜி அப்பேரல் பார்க், திருநகர், பெருமாநல்லுார் துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.'ஆட்டோ பவர் டிரான்ஸ்பார்மர்' அமைக்கும் திட்டத்தால், அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற மின்சாரம் வழங்க முடியும். கூடுதல் மின் தேவையையும் நிறைவேற்ற முடியும். திட்ட பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்து, பயன்பாட்டுக்கு ஒப்படைக்கப்பட்டது.திறன் மேம்படுத்தப்பட்டதால், சந்தைப்பேட்டை, முதலிபாளையம் துணை மின் நிலையங்களுக்கும், இங்கிருந்து கூடுதல் மின்சாரம் வழங்க முடியும். பல்லடம் தொகுதிக்குட்பட்ட முதலி பாளையம், நல்லுார், நாச்சிபாளையம் பகுதிகள்; திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட, மத்திய பஸ் ஸ்டாண்ட் பகுதிகள், பெரிச்சிபாளையம், பலவஞ்சிபாளையம், கருவம்பாளையம், குமரன் ரோடு, கடைவீதி பகுதிகளில் உள்ள மின்நுகர்வோரின், கூடுதல் மின்தேவையை பூர்த்தி செய்யலாம்.இவ்வாறு, அதிகாரிகள் கூறினர்.'மொத்தம், 16.84 கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்ட பணி முடிந்து, பயன்பாட்டுக்கு வந்துள்ளதால், திருப்பூர் மக்களுக்கு கூடுதல் மின்சாரம் வழங்க இயலும்' என்று சட்டசபை பொது நிறுவன குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.