ஒன்றிய அலுவலகம் தற்காலிக இடமாற்றம்; புதிய கட்டட பணி துவங்குவது எப்போது?
உடுமலை; உடுமலை ஒன்றிய அலுவலகம், தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றிய நிர்வாக அலுவலகம், தளி ரோடு மேம்பாலம் அருகில் அமைந்துள்ளது. இந்த அலுவலக கட்டடம் சராசரியாக, 60 ஆண்டுகளையும் கடந்து விட்டதால், புதிய கட்டடம் கட்டுவதற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.தவிர, பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, பயனாளிகள் வந்து செல்வதற்கு காத்திருப்பதற்கும் இடப்பற்றாக்குறை, கூட்டம், பயிற்சி நடத்துவதற்கான போதிய இடம் இல்லாததால், கூடுதல் வசதியுடன் புதிய கட்டடம் கட்டுவதற்கு, ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.இதுகுறித்து, ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தற்போது பழைய கட்டடத்தை அப்புறப்படுத்தி, புதிய அலுவலகம் கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன் அடுத்தகட்டமாக, ஒன்றிய அலுவலகத்தை தற்காலிகமாக நகராட்சி பழைய கட்டடத்தில் செயல்படுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இணைய இணைப்பு, அனைத்து துறைகளுக்குமான கோப்புகள், இடமாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது.நேற்று முதல், உடுமலை ஒன்றிய அலுவலகம், நகராட்சி பழைய கட்டடத்தில் தற்காலிகமாக செயல்பட துவங்கியுள்ளது.இருப்பினும், தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகள் துறை இன்னும் மாற்றப்படவில்லை. அத்திட்டத்தில் அன்றாடம் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டி இருப்பதால், விடுமுறை நாளில் மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பழைய கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் இம்மாத இறுதியில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளதாக, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.