பாலித்தீன் அடைப்பால் நீர்வரத்தில் சிக்கல்
உடுமலை: விவசாய நிலங்களையொட்டியுள்ள வடிகால்களில் வழிந்து வரும் நீரில், பெருமளவில் பாலித்தீன் குப்பைகள் வருகின்றன; இவை விவசாய நிலத்துக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது.தற்போது, வடகிழக்குப் பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் பிரபுராஜா கூறியதாவது:தற்போது பெய்து வரும் மழை விவசாயிகளுக்கு சாதகமானது தான். பெரும் மழை, புயல் சமயத்தில் தான் விளைநிலங்களில் பாதிப்பு ஏற்படும். இருப்பினும், இந்த மழையால் வெங்காயம், தக்காளி போன்ற அழுகும் பொருட்களுக்கு பிரச்னை ஏற்படும்.கிராமப்புறங்களில் குளம், குட்டைகளை துார் வாரியிருந்தால் ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகியிருக்காது. சுற்றியுள்ள விவசாய நிலங்களின் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கும்.விவசாய நிலங்களையொட்டியுள்ள வடிகால்களில் வழிந்து வரும் வெள்ளத்தில், பெருமளவில் பாலித்தீன் குப்பைகள் வருகின்றன; இவை விவசாய நிலத்துக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது; அவற்றால் வரப்பு, வாய்க்கால்களும் அடைபடுகின்றன. எனவே, பாலித்தீன் புழக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.இவ்வாறு, அவர் கூறினார்.