உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருமூர்த்திமலை சுற்றுலா மேம்பாடு திட்டம் எப்ப நிறைவேறும்?பல ஆண்டு இழுபறியால் மக்கள் வேதனை

திருமூர்த்திமலை சுற்றுலா மேம்பாடு திட்டம் எப்ப நிறைவேறும்?பல ஆண்டு இழுபறியால் மக்கள் வேதனை

உடுமலை:உடுமலை திருமூர்த்திமலை சுற்றுலா மையத்தில், பூங்கா, படகு இல்லம் மீண்டும் இயங்குதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் அதிகாரிகள் ஆய்வு, ஆலோசனைக்கூட்டங்கள், திட்ட மதிப்பீடு தயாரித்தல் என பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இழுபறியாகி வருகிறது.உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல், 960 மீட்டர் உயரத்தில், பசுமையான மலைகளிலிருந்து விழும், மூலிகை குணம் நிறைந்த அருவி, மலையடிவாரத்தில், தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.மேலும், திருமூர்த்தி அணை, படகு இல்லம், வண்ண மீன் பூங்கா, நீச்சல் குளம் என சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது.இங்கு, பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணியர், பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பூர் மாவட்டத்தின் பிரதான சுற்றுலா மையமாக உள்ள, திருமூர்த்திமலை சுற்றுலா மையத்தை மேம்படுத்த வேண்டும், என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

முடங்கிய படகு இல்லம்

ஆனால், சுற்றுலா பயணியரை கவரும் அம்சங்கள் இல்லாமலும், 16 ஆண்டுகளாக முடங்கி, சிதிலமடைந்து காணப்படும் படகு இல்லம், பஸ் ஸ்டாண்ட், கழிப்பிடம் என பொதுமக்களுக்கு எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லை.அணைக்கரையில், 2,700 மீட்டர் நீளத்திற்கு பூங்கா, சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா, நீர் விளையாட்டுக்களுடன் கூடிய 'தீம்பார்க்', பஞ்சலிங்கம் அருவிக்கும் செல்லும் வழித்தடத்தில், நிழற்கூரைகள், பாதுகாப்பு அம்சங்கள்,கோவில் வளாகத்தில் தீர்த்தம் எடுக்கும் மையம், குளியல் அறை, கழிப்பிடம் என ஏராளமான வசதிகள் மேற்கொள்ள, பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.பூங்கா அமைக்க நீர்வளத்துறை சார்பில் திட்ட அறிக்கை தயாரித்து, அரசுக்கு பல முறை அனுப்பப்பட்டு, நிதி ஒதுக்கவில்லை.ஐந்து ஆண்டுக்கு முன், அமைச்சர் முன்னிலையில் அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி, மேம்பாட்டுத்திட்டங்கள் குறித்து அறிக்கை தயாரித்த நிலையில், செயல்பாட்டிற்கு வரவில்லை.திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பின், சுற்றுலாத்துறை சார்பில் மேம்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் நடைமுறைக்கு வரவில்லை. ஆண்டுக்கு ஒரு முறை நடந்து வந்த ஆடிப்பெருந்திருவிழாவும் முடங்கியது.

அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில், சுற்றுலா வளர்ச்சித்துறை மாவட்ட அலுவலர் அரவிந்த் குமார், சுற்றுலா வளர்ச்சி குழு உறுப்பினர்கள் பாபு, நாகராஜ், நவீன், தளி பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனா, நீர்வளத்துறை உதவி பொறியாளர் கருணாகரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது, ரூ.10 கோடி மதிப்பில், அணைப்பூங்கா அமைக்க அரசுக்கு திட்ட அறிக்கை நீர்வளத்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில், அரசின் நிதி உதவி கிடைக்காமல் இருந்தாலோ, காலதாமதம் ஏற்பட்டாலோ, அணை பூங்கா அமைக்க சுற்றுலாத்துறைக்கு திட்டக் கருத்துருவை சமர்ப்பிக்குமாறும், இத்துறை வாயிலாக பணி மேற்கொள்ளப்படும்.திருமூர்த்தி அணையில், செயல்பட்டு வந்த படகு இல்லம், 2008ம் ஆண்டு முதல் செயல்படாமல் முடங்கியுள்ளது.மீண்டும் அதனை செயல்படுத்த, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் வாயிலாக நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என, மாவட்ட சுற்றுலா அலுவலர் தெரிவித்தார்.இனிமேலாவது, சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில், திருமூர்த்திமலை சுற்றுலா மைய மேம்பாட்டு பணிகளுக்கு உரிய நிதி ஒதுக்கி, பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை