ஊராட்சிகளில் குடிநீர் ஆபரேட்டர் கூடுதல் பணியிடம் உருவாக்கப்படுமா?
திருப்பூர், : தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில், ஒரே ஒரு துப்புரவு பணியாளர் மட்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மக்கள் தொகை அடிப்படையில், துாய்மை காவலர் தற்காலிகமாக பணி யாற்றி வருகின்றனர்.குடிநீர் வினியோக பணியை மேற்கொள்ளும், 'ஆபரேட்டர்' பணியிடம், 1991ல் நிரப்பப்பட்டன. அதன்பின், 2000வது ஆண்டில், புதிய பணியிடம் தோற்றுவிக்கப்பட்டது. மாநில அளவில், 43 ஆயிரத்து, 900 பணியிடம் உருவாக்கியும், சரியான அறிவிப்பு கிடைக்காமல், ஆப்ரேட்டர் நியமனம் முறையாக நடக்கவில்லை.கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்டு, ஒரு ஊராட்சிக்கு, மூன்று முதல், 16 ஆப்ரேட்டர் வரை பணியில் உள்ளனர். அவர்களுக்கு, மாதம், 2,050 ரூபாயும், ஒரு தொட்டிக்கு, 150 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. நீண்ட நாட்களாக பணியாற்றும் ஆப்ரேட்டர் மட்டும், 4,500 ரூபாய் சம்பளம் பெற்று வருகின்றனர்.கடந்த, 20 ஆண்டுகளில், பல்வேறு குடிநீர் அபிவிருத்தி திட்டங்கள், 'ஜல் ஜீவன்' மிஷன் திட்டம், கூட்டுக்குடிநீர் திட்டங்களில், தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, மேல்நிலை தொட்டிகள் கட்டப்பட்டன. ஒவ்வொரு ஊராட்சியிலும், ஏராளமான புதிய குடியிருப்புகள் உருவாகியுள்ளன. புதிய ஆப்ரேட்டர் பணியிடம் உருவாக்கப்படவே இல்லை. ஓய்வுபெற்றது, பணிக்காலத்தில் இறந்தது என, எண்ணற்ற காலியிடங்களும் உள்ளன.இதுகுறித்து ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில், 'கடந்த, 20 ஆண்டுகளாக, புதிய 'ஆப்ரேட்டர்' பணியிடம் உருவாக்கவே இல்லை; ஓய்வு பெற்றவர்களுக்கு மாற்றாக, புதிய நியமனம் நடக்கவில்லை. தற்போது, எண்ணற்ற தொட்டிகள் கட்டப்பட்டுள்ளதால், அவற்றை பாராமரிக்க உதவியாக, புதிய 'ஆப்ரேட்டர்' பணியிடங்களை உருவாக்கி, உடனடி நியமனம் செய்ய, அரசு உத்தரவிட வேண்டும், 'என்றனர்.