| ADDED : மே 30, 2024 10:00 PM
திருச்சி:இந்திய தண்டனை சட்டம் - ஐ.பி.சி., பாரதிய நியாய சன்ஹிதா - பி.என்.எஸ்., என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் இருந்த 511 பிரிவுகள் 356 பிரிவுகளாக்கப்பட்டுள்ளன.மேலும், 22 சட்ட விதிகள் ரத்து செய்யப்பட்டு, 175 விதிகள் மாற்றப்பட்டும் உள்ளன. இவை தவிர, புதிதாக எட்டு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மாற்றியமைக்கப்பட்ட இந்த சட்டப்பிரிவுகள், ஜூன் 1 முதல், நாடு முழுதும் அமலுக்கு வர உள்ளது. சட்ட விதிகள் மாற்றம் குறித்த விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில், தமிழகம் முழுதும் உள்ள போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி வழிகாட்டுதல்படி, திருச்சி மாநகரில் கே.கே.நகர், கண்டோன்மென்ட் உட்பட நான்கு இடங்களில், போலீசாருக்கான சிறப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது.போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசாருக்கு, திருச்சி நீதிமன்றங்களில் பணியாற்றும் வக்கீல்கள் சட்ட விதிகள் மாற்றம் குறித்து பயிற்சி அளித்து வருகின்றனர். கடந்த 27ம் தேதி துவங்கிய இப்பயிற்சி முகாம், இன்றுடன் நிறைவு பெறுகிறது.