கால்வாயில் குளித்த சிறுமி பலி காப்பாற்ற குதித்த தந்தை சாவு
திருவெறும்பூர்: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையச் சேர்ந்தவர் சுரேஷ், 40. பெல் ஊழியரான இவருக்கு கிருத்திகா, 13, யாஷிகா, 6, என இரு மகள்கள். இவர் நேற்று மதியம் தன் இரு மகள்களையும் அழைத்துக் கொண்டு, கிளியூர் பகுதி கல்லணை கால்வாய்க்கு குளிக்க சென்றார். முதலில் குளிக்க இறங்கிய யாஷிகா, திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அதை பார்த்த தந்தை சுரேஷ், மகளை காப்பாற்ற கால்வாயில் குதித்தார். அவரும் அடித்துச் செல்லப்பட்டார்.இதை கரையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மகள் கிருத்திகா கூச்சலிட, அங்கிருந்தோர் கால்வாயில் குதித்து இருவரையும் காப்பாற்ற முயன்றனர். அப்போது யாஷிகா மட்டும் மீட்கப்பட்டு, பெல் மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.இதுகுறித்து திருச்சி, திருவெறும்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் பொதுமக்களுடன் சேர்ந்து அடித்துச் செல்லப்பட்ட சுரேஷை தேடி வருகின்றனர். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட சுரேஷுக்கு நேற்று திருமண நாள்.