| ADDED : ஆக 23, 2011 01:13 AM
திருச்சி: அரியமங்கலம் அம்மாகுளம் குடிசை மாற்று வாரியம் வழங்கிய காலிமனைகளை, தற்போது குடியிருப்பவர்களுக்கே வழங்கவேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. திருச்சி அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பொதுமக்கள், நேற்று கலெக்டரிடம் கொடுத்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் திருச்சி திட்ட அலுவலகம் மூலம் கடந்த 1989ம் ஆண்டு அம்மாகுளத்தில் 294 காலிமனைகள் வழங்கப்பட்டது. முதல் தவணையாக குறிப்பிட்ட தொகையை பெற்றுக் கொண்டு, மீதித் தொகையை மாதந்தோறும் செலுத்தும்படி கோரப்பட்டது. இங்கு குடிசை போட்டு வாழ்ந்தவர்கள், எழுதப்படிக்க தெரியாதவர்கள் என்பதால், நிபந்தனைகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். இடத்தை அபிவிருத்தி செய்ய, அரசு மூலம் வழங்கப்பட்ட கடன் 5,000 ரூபாயும் கட்டமாமல் விட்டனர். காலப்போக்கில் இவர்களில் பலர் இறந்தும், வேலை காரணமாக வெளியூருக்கும் சென்றுவிட்டனர். தற்போது இறந்தவர்களின் வாரிசுகளும், வீடுகளை விற்றவர்களிடம் வாங்கியவர்களும் குடியிருக்கின்றனர். எங்களுக்கு இந்த இடத்தை தவிர சொந்த வீடு எதுவும் இல்லை. எனவே, இந்த இடத்தை குடியிருப்பவர்கள் பெயரில் உரிமைப்படுத்த, இடத்தை பொறுத்து ஒரு முடிவான தொகையை முடிவு செய்ய வேண்டும். கடந்த 25 ஆண்டாக தீர்க்கப்படாமல் உள்ள இந்த பிரச்னையை கலெக்டர் பரிசீலனை செய்து, இருதரப்பினருக்கும் பாதிப்பு இல்லாமல் தீர்த்து வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.