| ADDED : ஆக 02, 2011 11:58 PM
திருச்சி: திருச்சியில் வக்கீல் மீது வழக்கு போட்ட போலீஸ் இன்ஸ்பெக்டரை
கண்டித்து வக்கீல்கள் இருந்த உண்ணாவிரதம் பாதியில் கைவிடப்பட்டது.திருச்சி தென்னூரைச் சேர்ந்த வக்கீல் ஷாஜகான் புத்தூர் ஆட்டுமந்தை தெருவில்
அறை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். வாடகை மற்றும் முன்பணம் கொடுத்தது
தொடர்பாக வக்கீல் ஷாஜகானுக்கும், கட்டிடத்தின் உரிமையாளருக்கும் இடையே
பிரச்னை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில்
தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்தார்.
ஆனால், வக்கீல் மீது கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என்றும், அதை போலீஸ்
வாபஸ் பெறவேண்டும் என்று வக்கீல் சங்கத்தினர், அதன் தலைவர் தியாகராஜன்
தலைமையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.நேற்று காலை வக்கீல்
ஷாஜகானுக்கு ஆதரவாக வக்கீல் சங்கத்தினர் மாவட்ட நீதிமன்ற வாயிலில்
உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதையறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து,
தனக்கு கீழ் உள்ள அதிகாரிகளின் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று
அளித்த உறுதிமொழியின் பேரில், வக்கீல்கள் சமாதானம் அடைந்தனர்.இதையடுத்து
வக்கீல்கள் தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தையும் பாதியில் முடித்துக்
கொண்டு கிளம்பினர். இப்பிரச்னையால் கடந்த சில நாட்களாக நீதிமன்ற
புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வக்கீல்கள் இன்று முதல் வழக்கம்
போல் நீதிமன்ற பணிகளில் ஈடுபடுவார்கள் என்று தெரிகிறது.