| ADDED : ஜன 13, 2024 01:49 AM
திருச்சி:திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர்கள் பசுபதி, 22, வரதராஜன், 23, திருப்பதி, 24. இவர்கள் மூவரும், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியை பசுபதி வீட்டுக்கு வரவழைத்து, 2020ம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்து, மூவரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்சன், நேற்று முன்தினம் வழங்கிய தீர்ப்பில் மூவருக்கும் தலா, 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைத்தார்.நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பைக் கேட்ட குற்றவாளிகளில் பசுபதி, திருப்பதி ஆகிய இருவரும், நீதிமன்றத்தின், இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் அவர்கள் இருவரின் கால் மற்றும் இடுப்பில் காயம் ஏற்பட்டு, இருவரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.