உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் /  நள்ளிரவில் மாடு திருடும் கும்பல் ஹிந்து முன்னணி பகீர் குற்றச்சாட்டு

 நள்ளிரவில் மாடு திருடும் கும்பல் ஹிந்து முன்னணி பகீர் குற்றச்சாட்டு

வேலுார்: வேலுாரில், மாடுகளை நள்ளிரவில் மர்ம கும்பல் கடத்தி செல்வதாக, மாநகராட்சி கமிஷனர் லட்சுமணனிடம் ஹிந்து முன்னணியினர் புகார் அளித்தனர். பின், ஹிந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் மகேஷ் கூறியதாவது: வேலுாரில் சாலைகள், பொது இடங்களில் இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை பறிமுதல் செய்ய, வேலுார் மாநகராட்சி, 70 கி.மீ.,யில் உள்ள காஞ்சிபுரம் தனியார் கோசாலைக்கு அனுமதி அளித்துள்ளது. அவர்கள், சாலைகளில் சுற்றும் மாடுகளை பிடிக்காமல், வளர்ப்பு மாடுகளை நள்ளிரவில் பிடித்து, காஞ்சிபுரத்தில் உள்ள கோசாலையில் அடைக்கின்றனர். வேலுார் மாவட்டத்தில் வேலுார் கோட்டை, வசந்தபுரம் ஜெயின் கோசாலை, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வெட்டுவாணம் எல்லையம்மன் கோவில் கோசாலை உள்ளன. இங்கு மாடுகளை அடைக்காமல், 70 கி.மீ.,யில் உள்ள காஞ்சிபுரம் நகருக்கு ஏன் கொண்டு செல்ல வேண்டும். இதற்கிடையே, மாநகராட்சி அதிகாரிகள் ஆதரவுடன், வேலுாரில் மர்ம கும்பல் மாடுகளை பிடித்து, விருதம்பட்டில் உள்ள மாடு இறைச்சி அறுக்கும் கூடங்களுக்கு கள்ளத்தனமாக விற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். சாலையில் மாடுகள் திரிய காரணம் தமிழகத்தில், வளர்ப்பு மாடுகளுக்காக பல பகுதிகளில் மந்தைவெளிகள் இருந்தன. தற்போது அவை அரசு கட்டடங்களாகவும், ஆக்கிரமிப்புகளாகவும் மாறியதால் மாடுகள் மேய இடமின்றி தெருவில் சுற்றுகின்றன. எனவே, மேய்ச்சல் நிலங்களை அரசு உருவாக்கி தர வேண்டும் என்கின்றனர் பசு மாடுகள் வளர்க்கும் உரிமையாளர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ