| ADDED : ஜூன் 23, 2024 05:00 AM
திருவெண்ணெய்நல்லுார்: விவசாய பாசன மோட்டார் கொட்டகையில் குளித்த 2 சிறுவர்கள் மின்சாரம் தாக்கி இறந்தனர்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தடுத்தாட்கொண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் மகன் சப்தகிரி,11; இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.இவரது உறவினர் கலியபெருமாள் மகன் லோகேஷ்,6; இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் நேற்று மதியம் 12:30 மணியளவில் அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் உள்ள மோட்டார் கொட்டகையில் குளித்தனர்.அப்போது அப்பகுதியில் சென்ற உயரழுத்த மின் கம்பி திடீரென அறுந்து சிறுவர்கள் மீது விழுந்தது. அதில், மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.