விழுப்புரம்:அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், மேலும் ஒரு அரசு தரப்பு சாட்சி பல்டி அடித்தார்.விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறையில் உள்ள அரசு செம்மண் குவாரியை, கடந்த தி.மு.க., ஆட்சியின்போது ஏலம் எடுத்து, அதில், விதிமீறி செம்மண் எடுத்ததில், அரசுக்கு, 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய எட்டு பேர் மீது, 2012ல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக உள்ளனர். அவர்களில் 34 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், 27 பேர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். தொடர்ந்து, சாட்சிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன் ஆஜராகினர். அரசு தரப்பு சாட்சியான, ஓய்வுபெற்ற கிராம உதவியாளர் கோவில்மணி ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர், 'ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, உயர் அதிகாரிகள் கூறியதால் கோப்பில் கையெழுத்திட்டேன், எனக்கு எதுவும் தெரியாது' எனக்கூறி, அரசுக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்தார்.மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.