உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விழுப்புரம் அருகே கோவிலில் ஆதித்த கரிகாலன் கல்வெட்டு

விழுப்புரம் அருகே கோவிலில் ஆதித்த கரிகாலன் கல்வெட்டு

விழுப்புரம்: விழுப்புரம் அருகே ஆதித்த கரிகாலன் ஆட்சி காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் அடுத்த ஏமப்பூர் வேதபுரீஸ்வரர் கோவிலில், அண்மையில் திருப்பணி நடந்தது. அப்போது, அந்த கோவிலில் ஆதித்த கரிகால சோழனின் கல்வெட்டை, விழுப்புரம் அண்ணா அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், செயல் அலுவலர் சூரியநாராயணன், ஆய்வாளர் இமான் உள்ளிட்ட குழுவினர் கண்டறிந்தனர்.இது குறித்து, பேராசிரியர் ரமேஷ் கூறியதாவது:சோழ மன்னரான, சுந்தர சோழனின் மகனும், சோழ மன்னன் ராஜராஜனின் தமையனுமான ஆதித்த கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியனை போரில் தோற்கடித்து, அவன் தலையை வெட்டிக் கொண்டு வந்து, தஞ்சை அரண்மனை முன்பு சொருகி வைத்தான் என திருவாலங்காடு, எசாலம், லெய்டன் ஆகிய பகுதிகளில் கிடைத்த செப்பேடுகளில் தகவல் கூறுகின்றன.சுந்தரசோழன், தன் மகன் ஆதித்த கரிகாலனுக்கு, தொண்டை மண்டலம், திருமுனைப்பாடி ஆகிய பகுதிகளை ஆளும் உரிமையை வழங்கியுள்ளார். அதனால் தான், இப்பகுதியில் அவரது கல்வெட்டுகள் கிடைக்கின்றன. ஏற்கனவே விழுப்புரம் அருகே பேரங்கியூர், திருமுண்டீஸ்வரம் போன்ற இடங்களில், கல்வெட்டுகள் கிடைத்திருக்கிறது. தற்போது மேலும் ஒரு கல்வெட்டு, இந்த பகுதியில் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.இந்த கல்வெட்டு, ஸ்வஸ்தி ஸ்ரீ வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பரகேசரி என்று தொடங்குகிறது. நான்காவது ஆட்சி ஆண்டான, பொது ஆண்டு 960 என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு, திருமுனைப்பாடி நாட்டில் ஏமப்பேரூர் நாட்டு ஏமப்பேரூர் என்று, இந்த ஊரை அழைக்கிறது. இந்த ஊர் ஒரு நாட்டின் தலைமையிடமாக விளங்கி இருக்கிறது. ஏமப்பேரூர் என்பதே, தற்போது ஏமப்பூர் என்று மருவி அழைக்கப்பட்டு வருகிறது.இவ்வூர், திருவாலந்துறை ஆழ்வாருக்கு, இந்த ஊரில் மூர்த்தி, சூரியன், சந்திரர் உள்ளவரை, ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக 96 ஆடுகளை இக்கோயிலை நிர்வகித்த பன்மாகேஸ்வரர் வசம் ஒப்படைத்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவற்றிலிருந்து, ஆதித்த கரிகாலன் இப்பகுதியை ஆட்சி புரிந்ததையும், அறிய முடிகிறது.மேலும், இம்மன்னன் சதியால் கொல்லப்பட்டார் என்பதை, காட்டுமன்னார்கோகோவில் அருகே உள்ள உடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோவில் கல்வெட்டு குறிப்பிட்டதோடு, அவர்களின் பெயர் பட்டியலையும் தெளிவாக தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு, தமிழக சோழர் வரலாற்றில் குறிப்பிட தகுந்த முக்கிய வரலாற்று தகவலாக கிடைத்துள்ளது.இவ்வாறு ரமேஷ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி