உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தரமான விதைகளை வழங்க வேண்டும் விற்பனையாளர்களுக்கு அறிவுரை

தரமான விதைகளை வழங்க வேண்டும் விற்பனையாளர்களுக்கு அறிவுரை

விழுப்புரம்: மானாவாரியில் சிறுதானிய பயிர்கள் விதைப்பு அதிகரித்துள்ளதால், விற்பனையாளர்கள் தரமான விதைகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் செய்திக்குறிப்பு:விழுப்புரம், கடலுார் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், வரும் காரீப் பருவத்தில் மானாவாரி பட்ட சிறுதானிய பயிர்களான சோளம், கம்பு, மக்காச்சோளம், தீவனச்சோளம் ஆகிய பயிர்களை, விவசாயிகள் பெருமளவில் சாகுபடி செய்வர்.மானாவாரி பட்டத்தில், விதைப்புக்கு போதுமான மழைப்பொழிவு இருக்கும் பட்சத்தில், விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்கப்படுவதில்லை. மழை சீராக இல்லாத நிலையில், மண்ணில் ஈரப்பதம் குறைவாக இருப்பின், விதைகளின் முளைப்புத்திறன் பாதிக்க வாய்ப்புள்ளது.எனவே, மானாவாரி சாகுபடி நடைபெறும் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் சோளம், கம்பு, மக்காச்சோளம், தீவனச்சோளம் ஆகிய விதைகளுக்கு, அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்ட விதை குவியல்களை வழங்க விதை விற்பனையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இதனால், விதை விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்களிடமிருந்து, உண்மை நிலை விதை குவியல்கள் பெறப்பட்டவுடன், குவியல் வாரியாக விதை மாதிரி எடுத்து அனுப்பி, அவற்றின் முளைப்புத்திறனை அறிந்து, அவற்றில் அதிகபட்ச முளைப்புத்திறன் கொண்ட விதைக்குவயல்களை, மானாவாரி பகுதி விவசாயிகளுக்கு விநியோகித்தால், விதைகளின் முளைப்புத்திறன் தொடர்பான பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.இதனால், அனைத்து விதை விற்பனையாளர்களும், தங்கள் நிறுவன விதை இருப்பு மற்றும் விலைப் பட்டியல் பலகை வைக்க வேண்டும். விதை கொள்முதல் பட்டியல், உண்மை நிலை விதைகளுக்கான பகுப்பாய்வு முடிவு அறிக்கை, பதிவுச்சான்று. விற்பனைப்பட்டியல் ஆகிய ஆவணங்களை தவறாமல் பராமரிக்க வேண்டும்.விதை வாங்கும் விவசாயிகளுக்கு, விவசாயியின் கையொப்பம் பெற்று பில் வழங்கி, அதன் நகலை பராமரிக்க வேண்டும்.ஆவணங்கள் பராமரிக்காத மற்றும் தரமற்ற விதைகளை விநியோகிக்கும் விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்