| ADDED : ஜூலை 17, 2024 12:12 AM
விழுப்புரம் : 'விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கு அறிவிக்கை செய்துள்ள காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்' என வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிர் இழப்பை ஈடு செய்யவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்கவும் விழுப்புரம் மாவட்டத்தில் இந்தாண்டு சாகுபடி செய்யும் காரீப், சம்பா, ராபி பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மாவட்டத்தில், காரீப் பருவத்திற்கு 13 தாலுகாக்களில் உள்ள 367 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. காரீப் நடவு செய்துள்ள விவசாயிகள் வரும் 31ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.விழுப்புரம் மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு நிறுவனமாக யுனிவர்சல் சோம்போ பொது காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.நெல் விவசாயி ஏக்கருக்கு 690 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கான காப்பீட்டு தொகை 34,500 ரூபாய் ஆகும். இந்த தொகையை வரும் 31ம் தேதிக்குள் விவசாயி செலுத்த வேண்டும். அதே போல், நிலக்கடலை பயிருக்கு 590 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கான காப்பீட்டு தொகை 29,500 ரூபாய் ஆகும்.கம்பு பயிருக்கு 216 ரூபாய். இதற்கான காப்பீட்டு தொகை 10,900 ரூபாய். இந்த தொகைகளை வரும் ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீட்டு தொகை செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இது பற்றிய மேலும் விபரங்கள் அறிய விரும்புவோர், அருகே உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். காப்பீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதிக்குள் காரீப் பருவத்தில் நெல், வேர்க்கடலை, கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.